Friday, August 26, 2016

The old man and the sea
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்
பகுதி பதிமூன்று
 ••
மீனின் முதுகுப்புற எலும்பு வரிசை.
வெண்மையான நிர்வாணமாய்
சதையற்று இருந்தது.
••

காத்து நமக்கு நண்பன், என நினைத்தார் பெரியவர். பிறகு சேர்த்துக் கொண்டார் சில சமயங்களில்! அப்புறம் இந்த மகா கடல். அதில் நமது நண்பர்களும் இருக்காங்க. எதிரிகளும் உண்டு. அத்தோடு, ஆ, படுக்கை, என நினைத்தார். வெறும் படுக்கை போதும் எனக்கு. என் நண்பன் அல்லவா? அது அருமையான விஷயம் ஆச்சே. (சம்சாரம் பற்றிய நினைவுகள் அவரிடம் இல்லை.)
தோல்வி, அதன் பின்னான காலம் எளிமையானது தான், என யோசித்துப் பார்த்தார். இதுவரை நான் அறியாத எளிமை இது, தோல்விக்குப் பிறகான மகா எளிமை.
என்ன தோல்வி? யார் உன்னைத் தோற்கடிச்சா?
“ஒண்ணில்ல. என்னை யாரும் தோற்கடிக்கவில்லை” என்றார் சத்தமாக. “நாந்தான் ரொம்ப தூரமா கடலுக்கு உள்ளே போயிட்டேன்.”
சின்ன அந்தக் கரையில் அவர் நுழைந்தார். மாடி விடுதியின் விளக்குகள் அவிந்திருந்தன. எல்லாரும் இந்நேரம் படுக்கையில் படுத்து நல்லுறக்கத்தில் இருப்பார்கள், அவர் அறிவார்.
காற்று நல்ல நிதானத்துடன் மேலேறிச் சுழன்றது. இப்போது சலசலவென்று உக்கிரம் பெற்று வந்தது. ஆனால் கடற்கரை அமைதி காத்தது. பாறைகளுக்கு அடியே பட்டைவைத்து ஒதுக்கப்பட்ட ஒரு படித்துறைப் பக்கம் படகைக் கொண்டுபோய் நிறுத்தினார்.
கூட உதவிக்கு ஆள் யாரும் கிடையாது. அவரே முடிந்த அளவுக்கு படகைக் கரைப்பக்கமாக இழுத்து நிறுத்தினார். பிறகு கரைக்கு வந்தார். படகை பாறை ஒன்றோடு பிணைத்துக் கட்டினார். பாயமரத்தை இறக்கினார். துணியைச் சுருட்டிக் கட்டிக் கொண்டார். அதைத் தோளில் போட்டுக் கொண்டபடி மேடேறி வந்தார். அப்போது தான் அதுவரை தெரியாத சோர்வு அவருக்குத் தெரிந்தது. தள்ளாடியது.
அப்படியே ஒரு கணம் நின்றார். திரும்பிப் படகைப் பார்த்தார். தெரு விளக்கின் வெளிச்சத்தில் படகின் பின்புறத்தில் அதைவிட மகா உயரமான எடுப்புடன் அந்த வாலைப் பார்த்தார். மீனின் முதுகுப்புற எலும்பு வரிசை. வெண்மையான நிர்வாணமாய் சதையற்று இருந்தது. கெட்டியான தலையின் ஒரு பகுதி. கூர்மையான மூக்கு நீட்டித் தெரிந்தது.
பின்னே வால். முன்னே தலை. நடுவே தான் கோரமாக நிர்வாணக் கோலம்.
திரும்ப கரையை நோக்கி ஏறிவர ஆரம்பித்தார். மேட்டை எட்டவும் அப்டியே சரிந்து விழுந்து விட்டார். அப்படியே சிறிது படுத்துக் கிடந்தார். அவர்மேலே குறுக்காகக் கிடந்தது பாய்மரக் கம்பம். எழுந்துகொள்ள முயன்றார். முடியவில்லை. மகா காரியமாய் இருந்தது அது. அப்படியே சப்பென்று உட்கார்ந்து கொண்டார். பாய்மரக் கம்பம் தோளில்.
அப்படியே தெருவைப் பார்த்தார். எதோ பூனை கடந்து தன்வேலையாய் ஓடியதைக் கண்டார். அதை வேடிக்கை போலப் பார்த்துக் கொண்டிருந்தார். பூனை போயிருந்தது. இப்போது தெருவைத்தான் அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு அவரே கம்பத்தைத் தரையில் போட்டுவிட்டு தான் மாத்திரம் எழுந்து நின்றார். திரும்ப கம்பத்தைத் தூக்கிக் கொண்டார். அதைத் தோளில் ஏற்றிக் கொண்டார். தெரு வரை மேலேறிப் போக வேண்டியிருந்தது.
தன் ஜாகைக்கு அவர் போய் அடையும் முன்னால் அஞ்சு முறை ஆங்காங்கே உட்கார்ந்து ஆசவாசப்பட வேண்டியிருந்தது.
குடிசை. பாய்மரத் தண்டைச் சுவரில் சார்த்தினார். அந்த இருட்டிலேயே துழாவினார். தேடி ஒரு தண்ணீர்ப் போத்தலை எட்டி எடுத்தார். ஒரு மிடறு தண்ணீர் அருந்தினார். பிறகு படுக்கையில் படுத்துக் கொண்டார். போர்வையைத் தோளுக்கு மேலே ஏற்றி முதுகுக்கும் கால்களுக்குமாகப் போர்த்திக் கொண்டார். செய்தித்தாள்களில் குப்புறப் படுத்து உறங்கிப் போனார். கைகள் விலகி விரிந்து கிடந்தன. உள்ளங்கைகள் திருகினாப் போல மேலே பார்த்துக் கிடந்தன.
காலையில் பையன் வந்து பார்த்தபோது நல்ல உறக்கத்தில் இருந்தார் அவர். வெளியே காற்று கட்டுக்கடங்காமல் வீசிக் கொண்டிருந்தது. மீன் பிடிக்க இந்தக் காற்றில் கடலுக்குள் போக முடியாது. பையன் விடிந்த பின்பும் கூட நன்றாக உறங்கி மெதுவாக எழுந்து கொண்டிருந்தான். தினசரி வரும் வழக்கப்படி அவன் பெரியவரின் குடிசைக்கு அவரைப் பார்த்துப்போகலாம் என்று வந்தான்.
பெரிய பெரிய மூச்சுகளாய் விட்டுக் கொண்டிருந்தார அவர். அவரது கைகளைப் பார்வையிட்டான் அவன். பயந்து ஓவென்று அழ ஆரம்பித்தான். ஆனால் சத்தம் எழுப்பவில்லை. அமைதியாய் வெளியே காபி வாங்கிவர என்று கிளம்பினான். தெருவில் நடக்கையில் அவன் குமுறிக் குமுறி அழுதுகொண்டே தான் போக முடிந்தது.
கடற்கரையில் நிறைய மீனவர்கள் கூடி பெரியவரின் படகையும், அதில் கடடப்பட்டுக் கிடக்கும் மீனையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒராள் முட்டிவரை சராயை ஏற்றி மடித்துக் கொண்டு அந்த எலும்புக் கூட்டின் நீளத்தை தூண்டில் இழையினால் அளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்கேயிருந்தே பையன் எல்லாம் எல்லாம் பார்த்தான். ஆனால் அங்கேவரை கிட்டே போகவில்லை. ஏற்கனவே அவன் அங்கே வந்து விவரங்கள் அறிந்திருந்தான். தன்னொத்த ஒரு மீனவனை இந்தப் படகைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போயிருந்தான் பையன்.
“ஏய், பெரியவர் எப்பிடி இருக்காரு?” யாரோ சத்தமாய் அவனிடம் கேட்டார்கள்.
“தூங்கிட்டிருக்காரு” என்று சத்தங் கொடுத்தான் பையன். இப்போதும் அவன் அழுதபடியே இருந்தான். மத்தவர்கள் பார்ப்பதைப் பற்றி அவன் சட்டை பண்ணவில்லை. “யாரும் அங்க வந்து அவரை இப்ப தொந்தரவு பண்ண வேண்டாம்.”
“மூக்கு முதல் வால் வரை பதினெட்டு அடி!” அளவெடுத்தவன் கத்தினான்.
“ஆமாம். இருக்கும்” என்றான் பையன்.
மாடி உணவுவிடுதிக்குப் போனான். ஒரு கேனில் காபி கேட்டான். “நல்லா சூடா, நிறைய பால் விட்டு, சக்கரை போட்டு...” என்றான் பையன்.
“வேற எதாவது?”
போதும். அப்பறமா, அவரால என்ன சாப்பிட முடியுதுன்னு பாத்துக்கிட்டு வந்து வாங்கிக்கறேன்.”
“ஆகா. என்ன அருமையான மீன்!” என்றான் மார்ட்டின். விடுதிக்காரன். “இப்பிடி ஒரு மீன் இந்தப் பக்கம் யாருமே பிடிச்சது இல்லை. நீ நேத்தி பிடிச்சியே, ரெண்டு மீன்.... அதுவும் நயமான சரக்கு.”.
“என் மீன் பாழாப்போக!” பையன் சொல்லிவிட்டு திரும்ப அழ ஆரம்பித்தான்.
“எதாவது பானம், பீர் மாதிரி, எடுத்திட்டுப் போறியா?” கடைக்காரன் கேட்டான்.
“அதெல்லாம் வேணாம்,” என்றான் பையன். “அந்தா அவங்களை சாண்டியாகோவை வந்து பார்த்து தொந்தரவு செய்ய வேண்டாம்னு மாத்திரம் சொல்லுங்க. நான் போயிட்டு மறுபடி வரேன்.”
“அவரை நான் விசாரிச்சேன். நான் எவ்வளவு வருத்தப் படுறேன்னு அவராண்ட சொல்றியா?”
“நன்றி” என்றான் பையன்.
பாத்திரத்தில் காபி சூடாய் இருந்தது. பெரியவரிடம் போய் அவர் விழித்துக் கொள்ளும் வரை அவரைத் தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான். ஒரு சமயம் பெரியவர் விழித்துக் கொள்வார் போல இருந்தது. சற்றே அசைந்துவிட்டு திரும்ப பலமான உறக்கத்தில் அவர் ஆழ்ந்து போனார். காபி ஆறிவிட்டது. திரும்ப அதைச் சுட வைத்துத் தர வேண்டுமாய் இருந்தது. யாரிடமாவது விறகு வாங்கி வரலாம் என்று வெளியே வந்தான் பையன்.
மெல்ல பெரியவர் கண் விழித்தார்.
“எழுந்து உட்கார முயற்சிக்க வேணாம்” என்றான் பையன். “இந்தாங்க. இதைக் குடிங்க.”
ஒரு கண்ணாடி தம்ளரில் காபியில் கொஞ்சத்தை ஊற்றி நீட்டினான்.
அதை வாங்கிக் குடித்தார்.
“அதுங்க என் கையை அப்பிடியே மேசையில் சரிச்சிட்டது, மனோலின்!” என்றார் பெரியவர். “தோல்வின்னா துல்லியத் தோல்வி..”
“இது உங்களைத் தோற்டிக்கவில்லை... இந்த மீன்.”
“இந்த மீன் இல்லை. நிசம்மா மனோலின். அதற்கு அப்புறம்...”
“பெட்ரிகோவை படகையும் துடுப்பு சமாச்சாரங்களையும் பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன். அந்த மீனின் தலையை என்ன செய்யலாம்ன்றீங்க?”
“பெட்ரிகோ அதை வெட்டி எடுத்துக்கடடும். அதை அவன் மீனைப் பிடிக்கிற கண்ணிகளில் பயன்படுத்திக் கொள்வான்.”
“அந்த ஈட்டி?”
“உனக்கு வேணுன்னால் அதை, அந்த ஈட்டிமூக்கை நீயே எடுத்துக்கோ.”
“எனக்கு வேணும் அது” என்றான் பையன். “இப்ப நாம மத்ததைப் பத்தி யோசனை பண்ணணும்...”
“மத்தவங்கள்லாம் என்னைத் தேடினாங்களாடா?”
“பின்னே? கடலோர ரோந்துப்படை மூலம் தேடினாங்க. விமானம் மூலம் தேடினாங்க.”
“சமுத்திரம் ரொம்பப் பெரிசுடா. படகு சின்னது. அதை தூரத்தில் இருந்து கண்டுபிடிக்கறது கஷ்டமான காரியம்” என்றார் பெரியவர். அடாடா, கூடப் பேச்சுத் துணை என்று ஒராள் இருப்பது எப்பெரும் ஆறுதல், என்று கவனித்தார். இதுவரை நான் எனக்குநானே, இல்லாவிட்டால் கடலோடு அல்லவா பேசிக் கொண்டிருந்தேன்!
கடலும் மனசும் பதில் என்று குரல் தராதே! இன்னொரு மனுசக்குரல் என்பதே மனுசாளுக்குப் பெரும் சமாதானம் தான்.
“கடல்ல, கூட நீ இல்லைன்னு ரொம்ப இதுவா இருந்ததுடா” என்றார். ”நீ என்ன பிடிச்சிட்டு வந்தே?”
“முத நா ஒண்ணு. அடுத்த நா ஒண்ணு. நேத்தி ரெண்டு மீன் கிடைச்சது.”
“அட்டகாசம்.”
“இனிமே நாம ஒண்ணா சேர்ந்தே போலாம் தாத்தா.”
“ம்ஹும்” என்றார் பெரியவர். “நான் அதிர்ஷ்டக்கட்டை. இனி எனக்கு நல்ல காலம்னு எதுவும் கிடையாது...”
“அதிர்ஷ்டமாவது வெங்காயமாவது” என்றான் பையன். “அப்பிடிப் பாத்தாலும், நான் அதிர்ஷ்டக்காரன் தானே தாத்தா? என்னையும், அதிர்ஷ்டத்தையும் கூட நீங்க அழைச்சிக்கிட்டுப் போங்க தாத்தா.”
“உங்க அப்பாஅம்மா என்ன சொல்வாங்களோ?”
“அவங்க என்ன வேணா சொல்லட்டும். அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை. நேத்திக்கு எனக்கு ரெண்டு மீன் கிடைச்சது. ஆனாலும் இப்பலேர்ந்து நான் உங்ககூட வரேன். எனக்கு உங்ககிட்ட நிறைய கத்துக்கணும் தாத்தா...”
“பாய்ஞ்ச ஜோரில் சாவடிக்கிற ஒரு கோடாரி தயாரா படகில் எடுத்திட்டுப் போகணும்டா” என்றார் பெரியவர். பழைய ஃபோர்டு காரின் சக்கர விசிறிகளில் ஒரு பகுதியை எடுத்துக்கிட்டால் கோடாரி மாதிரிப் பயன்படும். கானாபகா பக்கம் போனால் பட்டறைகளில் சக்கர விசிறியைத் தட்டிக் கூர்மையாக்கி தயார் செஞ்சிக்கலாம். கூர்மையா இருக்கணும் அது. அதே சமயம் ஓரத்தை நசுக்கி மெல்லிசா ஆக்கிறப்டாது. அப்பிடி ஆக்கிப்பிடடால் உடைஞ்சிரும்” என்றார். “என் கத்தி அப்பிடித்தான்... உடைஞ்சிட்டது.”
“கத்தி வேற வாங்கிக்கலாம். நீங்க கேட்ட மாதிரி கோடாரி போல ஆயுதமும் பட்டறையில் தயார் செஞ்சிக்குவோம் தாத்தா.“
“வெளிய சூறைக்காற்று,எத்தனை நாள் இருக்கும்னு சொல்றாங்க?”
“ஒரு மூணுநாள். கூடவும் ஆகலாம்ன்றாங்க.”
“நாம எல்லாத்தையும் தயார் பண்ணிக்குவோம் தாத்தா” என்றான் பையன். “நீங்க உங்க கையை சொஸ்தம் பண்ணிக்கணும் ஐயா.”
“அதுங்களை எப்பிடி வெச்சிக்கணும்னு எனக்குத் தெரியும்டா” என்றவர், “ஒரு விஷயம்டா. நேத்தி ராத்திரி நான் திடீர்னு ஒரு மாதிரி புதுசா எதோ திரவத்தைக் கக்கினேன். அப்ப என் நெஞ்சில் எதோ நொறுங்கினாப் போல இருந்ததுடா.”
“அதையும் சரி பண்ணிக்கோங்க” என்றான் பையன். “பேசாமல் படுத்துக்கோங்க ஐயா. உங்க நல்ல சட்டை ஒண்ணு எடுத்து வரேன். அப்பிடியே சாப்பிடவும் எதாவது கொண்டு வரேன்.”
“நான் இல்லாத நாட்களின் செய்தித்தாள்கள் கிடைச்சா எடுத்திட்டு வாடா” என்றார் பெரியவர்.
”நீங்க சீக்கிரம் குணமாகணும். ஏன்னா உங்ககிட்ட நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு தாத்தா. கடலின் நல்லது ஆபத்தானது எல்லாத்தையும் நீங்க எனக்குச் சொல்லித் தரணும் தாத்தா. இந்தப் பயணத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க?”
“ஐயோ. நிறையப் பட்டாச்சு” என்றார் பெரியவர்.
“போயி நான் உணவும், நாளிதழ்களும் கொண்டு வரேன்” என்றான் பையன். “நல்லா ஓய்வெடுங்க தாத்தா. மருந்துக்கடையில் கேட்டு உங்க கைக்கு களிம்பு எதும் கிடைச்சால் வாங்கிட்டு வரேன்.”
“சரி. பெட்ரிகோ கிட்ட மறக்காமச் சொல்லிரு. தலை அவனுக்கு தான்.”
“மறக்க மாட்டேன். சொல்றேன்.”
பையன் வீட்டை விட்டு வெளியேறி, பவளப் பாறைகளைக் காலில் அழுத்திக் கொண்டு நடந்து போனபோது, அதுவரை அடக்கி வைத்திருந்த குமுறல் திரும்ப வெடித்தது.
அந்த மதியத்தில் ஒரு உல்லாசப் பயணிகளின் விருந்து மாடி விடுதியில். விருந்தினர்களில் ஒரு மாது மாடியில் இருந்து பார்த்தாள். விடுதிக்கு வெளியே தெருக் குப்பைத் தொட்டிகளில் காலி பீர் கேன்கள், விடுதியில் சாப்பாட்டு மிச்சங்களாக எறியப்பட்ட மீன் எலும்புக் கூடுகள். அவள் பார்வை தாண்டிப் போனபோது அந்தப் படகைக் கண்டாள். படகில் கட்டியிருந்த அந்த பிரம்மாண்ட மீனின் வாலோடு தலை வரை பார்த்தாள்.. காற்றுக்கும் அலைக்கும் அந்த மகா வால் எழும்பித் தணிவதைக் கண்டாள். கீழைக்காற்று அழுத்தமாக எல்லாவற்றையும புரட்டும் வேகத்துடன் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் வளையவந்து கொண்டிருந்தது.
“என்னப்பா அது?” என்று ஒரு பரிசாரகனிடம் விசாரித்தாள். ஒரு பெரிய மீனின் மகா எலும்புக் கூடு அது. இனி அது குப்பையாக அலையோடு போகப் போகிறது.
“திபுரான்” என்று ஸ்பானிய மொழியிலும் பின் “சுறா” என்றும் அவன் நடந்தவற்றை விளக்க முற்பட்டான்.
“சுறாக்களுக்கு இப்படி அழகான சீரான வால் இருக்கும்னு எனக்கு இதுவரை தெரியாது.”
“எனக்கும்” என்றான் அவள் கூட வந்தவன்.
தெருவுக்கு சற்று தள்ளி தனது ஜாகையில் பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். இப்பவும் குப்புறக் கவிழ்ந்திருந்தார். பக்கத்திலயே அந்தப் பையன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிழவனின் கனவுகளில் இப்போது சிங்கங்கள் உலவித் திரிந்து கொண்டிருந்தன.

(மு டி வு)
91 97899 87842 storysankar@gmail.com


Monday, August 22, 2016

THE OLD MAN AND THE SEA
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே


தமிழில் எஸ். சங்கரநாராயணன்
பகுதி பன்னிரெண்டு
••
அதிர்ஷடம் இருக்கட்டும்.
இருந்தால் நான் இந்த முன்பாதியைக்
கரைக்குக் கொண்டு சேர்ப்பேன்.
••

“கடைசி சம்பவம், அதில் எவ்வளவு சதை இழப்போ? கடவுளே அறிவார்!” என்றான் அவன்.
இதுதான் கடைசி சம்பவமா?
“இப்ப அது ரொம்ப ரொம்ப எடை குறைஞ்சிட்டது.” சுறாக்கள் பாய்ந்து கடித்ததில் நாசமாகிப் போன மீனின் கீழ்ப் பகுதி பற்றி யோசித்துப் பார்க்கவே முடியாமல் ஆயிற்று. சுறாவின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் வாய் வாயாய் மாமிசம் கிழிபட்டிருக்கும்.
இப்ப என்ன ஆயிற்று, இந்த மீனின் வாடையும், சதைச் சிதறல்களுமாக, ஒரு ராஜபாட்டையாட்டம் கடலின் எல்லா சுறாக்களையும் வரவேற்கிறது, சிவப்புக் கம்பள வரவேற்பு.
வீட்டில் பதப்படுத்தி வெச்சிக்கிட்டம்னு வெய்யி. ஒரு மனுசனுக்கு குளிர்காலம் முழுசுக்குமே அது உணவு. அதை இழந்து விட்டேன். அவனுக்கு வருத்தமாய் இருந்தது.
ச். அதையெல்லாம் நினைச்சிக்காதேடா. கம்னு அப்பிடியே ஓய்வு எடுத்துக்கோ. கைகளை சரி பண்ணிக்க முடியுமா பாரு. மிச்ச மீதி இருக்கிற மீனைக் கரைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியுதா பாரு.
கைகளைப் பார்த்துக் கொண்டான். என் கையின் இந்த இரத்தவாடை அது ஒண்ணுமே இல்லைன்னு ஆயிட்டது இப்ப. மொத்த தண்ணியுமே மீனின் ரத்த வாடையடிச்சிக் கெடக்குது. ஆனால் மீன் இப்படி கடிபடா விட்டால் இரத்தம் கொட்டாது இப்போது. என் கையில் கீறல்கள், அதுதான் இரத்த விளாறா இருக்கு. கீறல் இல்லாமல் கன்றிப் போயிருந்தால் பரவாயில்லை.
இப்பிடி ரத்தம் வர்றதுல ஒரு ஆதாயம் உண்டு. இடது கை, திரும்ப மரத்துப்  போகாது. உயிர்ப்போடு இருக்கும்!
இப்ப நான் எதைப் பத்தி நினைக்க, என்ன நினைக்க என்றே திகைத்து விட்டது. ஒரு நினைப்பும் உனக்கு வேணாம். எதையும் நினைக்காதே. அடுத்தடுத்த ஆபத்துகள், அவை பத்தியும் யோசிக்க வேணாம். வரட்டும். காத்திரு.
தாள முடியல்லியேப்பா. இது கனவாகவே இருந்திருக்கலாம், என திரும்ப யோசித்தான். ஆனால் யாருக்குத் தெரியும்? கனவானால் நல்ல மாதிரி இது, இந்த சம்பவம் எல்லாம் நிகழ்ந்திருக்கலாம்!
இன்னொரு சுறா தனியாக வந்திருந்தது, மண்வாரிமூக்கன். அலைமேலே ஒரு பன்றியைப் போல வந்தது. அகலமான பன்றி வாய், உள்ளே உங்க தலையே நுழையலாம்.
அதுவந்து மீனைக் கவ்வட்டும், என பெரியவர் காத்திருந்தார். பிறகு அதன் மூளையைப் பார்க்க துடுப்புக் கத்தியை அழுத்திச் செருகினார். ஆனால் சுறா மல்லாக்கத் துள்ளி பின்சரிந்து உருண்டது. இந்த முயற்சியில் கத்தியே ரெண்டு துண்டாய் உடைந்து விட்டது.
பெரியவர் அயர்ந்திருந்தார். பேசாமல் படகை வலித்துப் போக ஆரம்பித்தார்.
சுறா திரும்ப தண்ணிக்குள் மூழ்குவதைப் பார்க்கக் கூட அவருக்குத் தோன்றவில்லை. மேலாக முழுசாக எழுந்த சுறா. பிறகு மெல்ல பாதி உள்ளமுங்கி, சின்னதாகி, மறைந்தே போனது சுறா. அதைப் பார்க்க அவனுக்குப் பிரயம் உண்டு. இப்போது அதை சட்டையே செ4ய்யவில்லை அவன்.
“பாய்மரத்தின் இரும்புக் குச்சி, கொக்கிப் பூண் போட்டது. அதுதான் என்னிடம் இப்ப கைவசம் உள்ளது” என்றான் கிழவன். “ஹ்ம். அது எந்த வேலைக்கும் ஆகாது. ரெண்டு துடுப்புகள் இருக்கு. சுக்கான் திருப்பி. சின்ன இரும்பு ஸ்பானர். பிறகு ஒரு குறுந்தடி. அவ்வளவே.”
இதுங்க, சுறாக்கள்... நான் அடிச்சித் துவைச்சாப் போல தான் இருக்கு, என நினைத்தான். நான் வயசாளி. ஒரு சுறாவை தடியால் அடிச்சிக் கொல்ற அளவு என்கிட்ட பலம் இல்லை. என்றாலும் துடுப்புகள் உள்ள வரை அதையும் முயற்சி செய்து பாத்திற வேண்டிதான். குறுந்தடி இருக்கு. திருகியும்...
திரும்ப கைகளை ஈரப்படுத்திக் கொள்ள தண்ணியில் முக்கினான். மதியம் தாண்டிய பொழுது. தூர தூரத்துக்கும் கடலையும் வானத்தையும தவிர எதுவும் கண்ணில் தட்டவில்லை.
காற்று நல்ல அளவில் மேல் சுற்றாக எழும்பிச் சுழன்றது. நல்ல வேகத்தில் கரையை எட்டலாம் என்று இருந்தது அவனுக்கு.
“நீ ரொம்ப தளர்ந்திட்டே ஐயா” என்றான். “உள்ளாற நீ அசந்து ஆளே சுருங்கியாச்சி.”
அஸ்தமனப் பொழுது வரை பிரச்னை எதுவும் இல்லாத பயணம். அப்பறம் தான் மேலும் சுறாக்கள் தாக்குதலுக்கு வந்தன.
அவனது மீன் கடலில் ஒரு தடத்தை ஏற்படுத்தியவாறே வந்து கொண்டிருந்தது. அதைப் பின்பற்றியே தொடர்ந்து வருகின்றன சுறாக்கள். பழுப்பு நிற செதிள்களை அவனால் பார்க்க முடிந்தது.
மற்ற சுறாக்கள் கடித்துக் குதறியதில் இந்த மீன் திரவமாக ஒழுகிக் கொண்டே வந்தது இப்போது. இந்தப் புதிய சுறாக்கள், இவற்றுக்கு ரத்த வாடையே வேண்டியிருக்கவில்லை. சுறாக்கள் அதுபாட்டுக்கு படகு கூடவே நீந்தி வர ஆரம்பித்திருந்தன.
பாய்மரத் துணியைக் கட்டி இறுக்கினான் சுக்கானை இறுக்கினான். பிறகு பின்பகுதிக்கு வந்து குறுந்தடியைக் கையில் எடுத்துக் கொண்டான். அது உடைந்த ஒரு துடுப்பின் கைப்பிடி. உடைந்த துடுப்பை நறுக்கி ரெண்டரை அடிக்கு தடி என எடுத்து வைத்திருந்தான்.
துடுப்புக்காக அதில் அதை மாட்டிக் கொள்கிற அளவில் வளையம் இருந்தது. ஆகவே ஒரு கையால் மாத்திரமே அதைக் கையாள முடியும். அவன் வலது கையால் அதைக் கையாள முடிவு செய்தான். கையால் வளைத்துத் தடியைப் பிடித்துக் கொண்டான்.
அப்படியே திரும்பி அந்த இரு சுறாக்களைப் பார்த்தான். இரண்டுமே கலனோக்கள்.
முதல் சுறா வந்து இரையை நல்லபடியா கவ்விக் கொள்ளட்டும். பிறகு அதை மூக்கிலேயோ, சரியா உச்சந்தலைமேலேயே போடுவேன், என நினைத்தான்.
இரு சுறாக்களும் நெருக்கமாய் வந்தன. அதில் ஒண்ணு அவன்கிட்டத்தில் வந்து தாடையை விரித்தது. மீனின் வெள்ளிப்பாங்கான பிரதேசத்தில் அதை அழுத்திக் கொண்டன. தடியை நல்ல உயரம் உயர்த்திக் கொண்டான். கனமாக அதைக் கீழே இறக்கினான்.
அகலமான அதன் உச்சி மண்டையில் விளாசினான் தடியால். கடின ரப்பர் போல, டயர் போல இருந்தது மண்டை. என்றாலும் அவனது அடி அல்லது இடிக்கு உள் எலும்பையும் தொட முடிந்தது. திரும்பவும் அதன் மூக்குப் பக்கமாய் இன்னொரு மொத்து. அத்தோடு அந்த சுறா, மீனை விட்டு பிடிநழுவி கடலில் கிறங்கி இறங்கியது.
அடுத்த சுறா கிட்டே வருவதும் விலகிப் போவதுமாய் போக்கு காட்டியபடி இருந்தது. அது இப்போது வாயை விரித்து கிட்ட வந்தது. அதன் வாயையும் பற்களையும் அதன் ஓர இடுக்குகளில் வெள்ளையாய் மீனின் மாமிசத் துணுக்குகளையும் கிட்டத்தில் பார்த்தான்.
அது மீனுக்கு எகிறி அதைக் கடித்து வாயை மூடிக் கொண்டபோது இவன் வசத்தில் துள்ளியது. இவன் அதன் தலையிலேயே ஓங்கி அடித்தான். அடி வாங்கிக்கொண்டு சுறா அவனைப் பார்த்தது. அப்படியே கவ்வியிருந்த மாமிசத்தைத் தளர விட்டது.
இன்னொரு தடவை தடியை வீசியடித்தான் கிழவன். உணவை முழுங்கியவாக்கில் அது தண்ணீரில் அமுங்கியது. அவனது அடுத்த அடி அதன் தலையின் டயர்த்தனமான பகுதியில் விழுந்தது.
“ஏய் கலனோ.. வா பீடையே” என்று கத்தினான். “கிட்டத்தில் வா பார்க்கலாம்.”
ஒரு அவசரத்துடன் சுறா பக்கத்தில் வந்தது. அது வாயை மூடிய நேரத்தில் அதை திரும்ப அடித்தான் கிழவன். உதைன்னா இது உதைன்றாப் போல பலத்தையெல்லாம் கூட்டி அடித்தான். கையை முடிந்த உயரம் மேலேற்றி மகா ஆவேசமாய் இறக்கினான். மூளைக்கு அருகே எலும்பை உணர்ந்தான் இப்போது. அதாண்டா இடம், என்று அங்கேயே இன்னொரு அடி.
சுறா வேகம் அடங்கி, மிக மெல்லமாய் அந்த மாமிசத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது. அப்படியே மீனை விட்டுவிட்டு உள்ளே விழுந்தது.
இப்ப திரும்ப வரும், என்று அவன் காத்திருந்தான். ஆனால் அந்த ரெண்டு சுறாவுமே திரும்ப மேலே வரவில்லை. பிறகு பார்த்தான். ஒரு சுறா அப்படியே வட்டமாய்த் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருப்பதைப் போல நீரில் சலனங்கள். மத்தது என்ன ஆயிற்று தெரியவில்லை.
எல்லாத்தையும் என்னால் கொன்றுவிட முடியும்னு நான் எதிர்பார்க்க முடியாது, என நினைத்துக் கொண்டான். அப்ப, என் வாலிபப் பருவத்தில் அது முடிந்திருக்கலாம். இப்ப அதே பலத்தை என்னிடம் எதிர்பார்கக எப்படி முடியும்? ஆனாலும் அந்த ரெண்டையும் செமத்தியா பூசை செய்தேன். செம அடி பட்டிருக்கும் அதுங்களுக்கு.
ஒரு பந்தடிக்கிற மட்டை மாதிரி எதாவது இருந்தால், ரெண்டு கையையும் பயன்படுத்தி முதல் சுறாவை அடித்தே கொன்னிருப்பேன். ஆமாம் நிச்சயமா, இந்த வயசிலும் என்னால முடியும், என நினைத்தான்.
அந்த மீனின் மிச்சத்தை என்னால் பார்க்க முடியாது. இருந்த உருவத்தில் பாதி கூட இப்ப இருக்காது அது.
அவன் சுறாக்களுடன் பொருதிக் கொண்டிருந்தபோதே சூரியன் மேற்கே இறங்கி விட்டிருந்தது.
“சீக்கிரமே இருட்டிப்பிடும்” என்று சொல்லிக்கொண்டான் கிழவன்.. “ஹவானாவில் இருந்து விளக்கு மினுக்கம் கண்ணுல படுதான்னு பாக்கணும்.
கிழக்குவாடையில் ரொம்ப உள்ளாட்டு இருந்தால், புதுக் கடற்கரைகளில் எதாவது வெளிச்சத்தைப் பார்க்கலாம்.
நான் ஒண்ணும் ரொம்ப கரையைவிட்டு தூரக்க இல்லைன்னு தோணுது, என நினைத்தான். ஊரில் என்னை அத்தனைக்குத் தேட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ம். அந்தப் பையன், மனோலின், அவன்தான் ரொம்பக் கவலைப் படுவான். அவன்மாத்திரம்தான்... என்றிருந்தது. ஆனால் எனக்கு நல்லாத் தெரியும். பையன் என் மேல் அபார நம்பிக்கை உள்ளவன். நான் எப்பிடியும் வந்திருவேன்னு தான் அவன் இருப்பான். ம். அதேமாதிரி, வயசாளி மீனவர்கள், அவர்கள் கவலைப்படக் கூடும். இனனும் சில பேர் கூட இருக்கலாம். நல்ல ஊர் தான் நம்மூரு.
இப்போது இனிமேல் மீனுடன் பேச முடியாது, என்றிருந்தது. மீனின் உருவே ரொம்ப மோசமாய் இருந்தது. அப்பதான் திடீரென்று ஒரு எண்ணம் அவன் மனசில் வந்தது.
“ஏ பாதி மீனே!” என்று கூப்பிட்டான். “நீயும் மீன் கணக்கு தான். முழு மீனாகத் தானே இருந்தாய். நான் வருந்துகிறேன். நான் கடலுக்கு அத்தனை உள்ளே போயிட்டேன். தப்பு அது. நம்ம ரெண்டு பேருக்குமே அது கெடுதலா முடிஞ்சது. ஆனால் நாம, நீயும் நானுமாக, நிறைய சுறாக்களைக் கொன்னிருக்கோம். நிறைய சுறாக்களுக்கு மோசமான அடி கொடுத்திட்டோம். இதுவரை பழைய மீனே, எத்தனையை நீயா கொன்னுருக்கே? உன் மூக்கே சரியான ஈட்டி, அதைச் சுமமாவா வெச்சிருந்திருப்பே நீ?”
அந்த மீனைப் பத்தியே நினைத்துக் கொண்டு போகப் பிடித்தது அவனுக்கு. இந்த மீன் உசிரோடு இருந்திருந்தால் சுறாவால் இதை நெருங்க முடியுமா? அதன் கூரிய மூக்காலேயே சுறாக்களை ரணமாக்கியிருக்கும்.
நான் என்ன செஞ்சிருக்கணும். அந்த சுறாக்களின் அலகுகளை வெட்டி இந்த மீனின் கூர்நுனியில் வரிசையாக் குத்தி அழகு பார்த்திருக்கலாம். அதுக்கு எனக்கு, என்னிடம் கோடாரி இல்லை. அப்புறம்... இருந்த கத்தியும் போயிட்டது.
ஒரு கோடாரி, அதைத் துடுப்பில் கட்டிக்கிட்டால், என்ன அருமையான ஆயுதம் அது.
ம். சகோதரன் தான் இது எனக்கு. நாங்க ரெண்டு பேருமா இந்த சுறாக்களை எதிர்த்திருந்தால் கதையே வேற.
இப்ப ராத்திரிப் போதில் அந்த மாதிரி சுறாக்கள் படை யெடுத்தால், நீ என்ன செய்வாய்? உன்னால என்ன செய்ய முடியும்?
“விடாமல் அத்தோட போராடணும்” என்றான். “நான் சாகும் வரை போராடியே ஆவேன்!”
நல்ல இருட்டு. வெளிச்சக் கசிவின் மினுக்கமோ, விளக்குகளோ எதுவும் இல்லை. காற்று இருந்தது. அது படகை இழுத்துக் கொண்டு போகிறது. இந்த இருட்டில் அவனுக்கு தானே இருக்கமா இல்லையான்னு ஆயிட்டது.
ஏ நீ செத்திட்டியா இருக்கியா?
ரெண்டு கையும் சேர்த்து ஒரு கையால் இன்னொரு உள்ளங் கையைத் தொட்டு உணர்ந்தான். அதில் உயிரின் கதகதப்பு மிச்சம் இருந்தது. உள்ளங்கையில் இன்னும் காயங்களின் காய்ப்பு இருந்தது. அதை மூடித் திறந்தாலே வாழ்வின் வலியை உணர முடிகிறது.
படகின் பின்பக்கமாக பலகையில் சாய்ந்து கொண்டான். உடலின் அசைவு. நான் இன்னும் இருக்கேன். செத்துடல்ல. மரத்தண்டில் உரசின அவன் தோள்கள். அவை சொல்லின இப்படி.
இந்த மீன் கிடைத்தால் நான் பிரார்த்தனை செய்வதாய்ச் சொன்னேனே, அந்தப் பிரார்த்தனைகளைச் சொல்ல வேண்டியது நிலுவையில் இருக்கிறது. ஆனால் இப்ப அவற்றைச் சொல்ல முடியாது. எனக்கு உடம்பில் அடித்துப் போட்ட அசதி. என்னால் பிரார்த்தனகளை உச்சரிக்க முடியாது இப்போது. ஏ அந்த சாக்கை எடு, தோள்ல போட்டுக்க, கொஞ்சம் கதகதப்பாக இருக்கும்.
படகில் சயன நிலையில் கிடந்தபடி, துடுப்புகளை வலித்துப் போனான். வானத்தில் வெள்ளி வருகிறதா என்று பார்த்தபடியே போனான்.
அந்த மீன், அதில் பாதி இருக்கு இப்ப, என நினைத்தான். அதிர்ஷடம் இருக்கட்டும். இருந்தால் நான் இந்த முன்பாதியைக் கரைக்குக் கொண்டு சேர்ப்பேன். பார்க்கலாம். எல்லாத்துக்கும் மனுசாளுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டி யிருக்கிறது.
“தப்பு,” என்று கத்தினான். “நீ எப்ப அத்தனைக்கு கடலுக்கு உள்ளார போனியோ, அப்பவே உன் அதிர்ஷ்டத்தின் விதியை மீறிட்டாய் நீ.”
“என்னத்தையாவது தத்துபித்துனு உளறாதே!” என்று கத்தினான். “தூங்கிறப்டாது நீ. விழிச்சபடி படகை ஓட்டு. இன்னுங் கூட உனக்கு அதிர்ஷ்ட கணங்கள் வரும்.”
“எங்கியாவது கடைல அது கிடைச்சால் நல்லா யிருக்கும். நானும் அதை வாங்கி வெச்சிக்கலாம் இல்லே?” என்றான் வேடிக்கையாய்.
அதன் விலை என்ன, என யோசித்தான். நான் இழந்த குத்தீட்டி, அதுதான் அதன் விலையா? ஒரு உடைஞ்ச கத்தி, ரெண்டு சிராய்ப்பு கண்ட கைகள், இவற்றைக் கொடுத்தால் அதிர்ஷ்டம் வந்துருமா எனக்கு?”
“கிடைக்கலாம்” என்று பதில் சொல்லிக் கொண்டான். “நீ கடலில் ஒரு எண்பத்தி நாலு நாள் பிரயத்தனத்தில் அதைப் பெற முயற்சி செய்தாய். ஓரளவு அதிர்ஷ்டம் உனக்கு அடிக்கவும் செய்தது. அதை நீ விலைகொடுத்து வாங்கி விட்டாப் போலத்தானே இருந்தது?”
என்னென்ன கன்னா பின்னா சிந்தனைகள், என்று பட்டது. நல்லூழ், அல்லது அதிர்ஷ்டம்... அது பல ரூபங்களில் வரும். அதை யார் எப்படி அடையாளங் காண முடியும்?
அட அத எந்த ரூபத்தில் தான் வரட்டுமே, நான் அதைப் பெற்றுக் கொள்ளத் தயார். அதற்கான விலையும் நான் தருவேன்...
சரி. எங்காவது வெளிச்சம் மினுங்குதா, தெரிஞ்சா நல்லாருக்கும், என நினைத்தான். நிறைய எனக்கு சாதகமான விஷயங்களா நடக்கணும்னு நான் ஆசைப் படுகிறேன். மத்ததை விடு. இப்ப எனக்கு இது ஒண்ணுதான். கரை. வெளிச்சம்... அதுவே.
துடுப்பு வலிக்க இன்னும் வசதியாய் உடம்பைக் கிடத்திக் கொள்ளப் பார்த்தான். உடம்பு உயிர்ப்புடன் தான் இருந்தது. வலி விண் விண்ணென்று உயிரின் துடிப்பாக ஒலித்தது.
ஊரின் விளக்குகளின் பிரதிபலிப்பு போல சிறிது மினுங்கல் அவன் பார்வைக்குத் தட்டியபோது இராத்திரி ஒரு பத்து மணி போல இருக்கலாம். நிலா எழுமுன்னால் அவனால் கணிக்க முடிந்த வெளிச்சம் அதுவாகத் தான் இருந்தது.
பிறகு அந்த மினுக்கம் ஒரு மாதிரி திரண்டு நிலைத்தது. காற்று அதிகரிக்க கடல் பொங்கித் தணிந்து கொண்டிருந்தது காற்றில்.
புள்ளியான மினுக்கம் பார்த்தபடியே படகைச் செலுத்திப் போனான். ம். இப்ப, சீக்கிரமே... நான் நீரோட்டத்தைத் தாண்டி கரைப் பகுதிக்குள் போயிருவேன்.
அப்பா,. எல்லாம் ஓரளவு முடிஞ்சாப் போலத்தான், என நினைத்தான்.
அப்படிச் சொல்லிற முடியுமா, என்றும் இருந்தது. அவை, சுறாக்கள் என்னைத் திரும்ப தாக்க வரலாம். ஒரு மனுசன் இந்த கும்மிருட்டில், அதுவும் கையில் ஆயுத ஆயத்தம் இல்லாமல்… என்னதான் செய்ய முடியும்?
உடம்பே அடித்துப் போட்ட மாதிரி விரைத்துப் புண்ணாகிக் கிடந்தது. உடம்பில் அங்கங்கே காயங்கள். சிராய்த்த கீறிய அடிபட்ட இடங்கள் அத்தனையுமே அந்தக் குளிரில் கடுமையாய் வலி கண்டன.
இனிமேலும் கடலில் எனக்கு போராட்டம் எதுவும் இராதுன்னு நம்பறேன், என நினைத்தான். இல்லாமல் இருந்தால் நல்லது. அதான் எனது பேராசை!
ஆனால் நள்ளிரவில் அவன் போராட வேண்டி வந்தது. இப்போது தனது எதிர்ப்பு அர்த்தமற்றது என்பதை அவன் அறிவான்.
சுறாக்கள் கும்பலாக வந்திருந்தன. தண்ணீர் மட்டத்தில் அந்த இருட்டுக் கசத்தில் சிறு நெளிவுகளையே அவனால் காண முடிந்தது. செதிள்களால் ஏற்பட்ட நீர்ச்சிதறல்கள். அவை மீனுக்குப் பாய்கையில் சிறு பளபளப்பு கண்டது வெளியில்.
உத்தேசமாய் அவற்றின் தலையில், வாயில் அடித்தான் அவன். படகு கிடுகிடுவென்று ஆட்டங் கொடுத்துக் கொண்டிருந்தது. சுறாக்கள் படகடியில் இருந்து எட்டி முட்டி வந்திருக்கலாம்.
பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை. ஒரு எதிர்ப்பு என்கிற அளவில் தடியை வீசிக் கொண்டிருந்தான். வெறும் சத்தங்கள். உடல்ரீதியான தொடு உணர்ச்சிகள். பார்வை இல்லை.
ஒரு சுறா அவன் கட்டையைக் கவ்விக் கொண்டதோ தெரியாது. அவன் கையில் இருந்து கட்டை உருவப்பட்டு, போய்விட்டது கடலில்.
சுக்கான் ஸ்பானரை உருவி எடுத்தான். அதனால் அடிக்கவும் மோதவும் ஆரம்பித்தான். பெரிய ஸ்பானர் அது. ரெண்டு கையாலும் அதைப் பற்றிக் கொண்டிருந்தான்.
அதை வீசி வீசித் தாக்கினான். ஆனால் நிறைய சுறாக்கள். படகின் முன்வசத்துக்கு ஏறி வந்திருந்தன அவை. ஒன்றை மற்றதை பிறகு ஒரேசமயம் அத்தனையையும் அவன் கிறுக்குப் பிடித்தாப் போல தாக்க வேண்டி வந்தது.
சுறாக்கள் கிழித்து இழுத்ததில் மாமிசமே கடலில் சிந்திச் சிதறி மினுக்கங் காட்டியது. எல்லாமே எட்டிக் கவ்வின. கிழித்துக் கொண்டு நகர்ந்தன. பிறகு திரும்ப எகிறிக் கொண்டிருந்தன.
கடைசியாக ஒன்று, தலையை நீட்டியது. அவன் அறிவான். இத்தோடு சுறாக்கள் விலகி விடும். சுறாவின் தலைக்குக் குறுக்காக ஸ்பானரை வீசினான். திரும்பத் திரும்ப வீசினான். சுறா, மீனை தலைப்பகுதியைக் கவ்விக் கொண்டிருந்தது இவனுக்கு வசமான குறி தந்தது.
என்றாலும் அதை வீசியபோது ஸ்பானரின் குச்சியும் ஒடிந்து போன சத்தம் கேட்டது. உடைந்த மீதிப்பகுதி கூர்மையாய் இருக்கும். அதை சுறா மேல் பாய்ச்சினான். நுரையீரல் பகுதி என அனுமானித்து உள்ளே செலுத்தினான். ஆயுதம் உள்ளே சொருகி இறங்கியதை உணர்ந்தான். நல்ல கூரிய கம்பிதான். திரும்பவும் அதை உள்ளே செலுத்தினான்.
சுறா இரையை விட்டுவிட்டு தண்ணீரில் உருண்டது. அந்தக் கும்பலின் கடைசி சுறா அது. சுறாக்கள் கிளம்பி விட்டன போலும். இங்கே வழிச்சித் துடைச்சாச்சி. அவைகளுக்கு இனி சாப்பிட எதுவும் மிச்சம் இல்லை இங்கே.
அவனுக்கு மூச்சடைத்தது. வாயே கசந்து வழிந்தது ஒரு விநோத வாடையுடன். ஒரு தாமிர நெடியுடன் சற்றே இனித்துக் கிடந்த கக்கல். சட்டென அப்படி எதிர்த்து வந்ததில் பயந்து போனான். என்றாலும் மேலும் அவன் கக்கவில்லை. நின்று விட்டது.
கடலில் காறித் துப்பினான். “இதைத் தின்னுங்க கலனோ சனியன்களா! இதைத் தின்னுட்டு, ஒரு மனுசனைக் கொன்னுட்டா மாதிரி நீங்க பிரமை கொள்ளலாம்!” என்றான் சத்தமாய்.
ம். இப்போது இறுதியாக ஒருவழியாக அவன் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டான். விமோசனம் அற்றுப் போனான் இப்போது.
படகின் பின்வசம் வந்தான். கையில் மிச்சம் இருந்த அந்த ஸ்பானர், இப்போது அது சுக்கானைக் காற்றோட்ட வசத்துக்குத் திருப்பி படகை ஓட்ட வேலைக்காகுமா என்று சோதித்தான். நல்லவேளை, அதை உபயோகிக்க முடிந்தது.
தோளோடு சாக்கைச் சுற்றிக் கொண்டான். படகைத் தன்பாட்டுக்குப் போகட்டும் என விட்டுவிட்டான்.
பயணம் சிரமம் இல்லாமல், எடை இல்லாமல் இருந்தது. அவனும் அப்படியே உறைந்தாப் போல இருந்தான். எந்த யோசனையும், எந்த உணர்ச்சியும் அவனிடம் இல்லை.
மகா களைப்பு அது. எல்லாவற்றையும் கடந்த நிலை. சாறு அற்ற சக்கை நிலை.
நம்ம ஊரைப் பார்க்க போய்ச் சேரணும். அதை எப்படி வழிபிசகாமல், சாமர்த்தியமாச் செய்யணுமோ செய்யிடா.
இரவில் மேலும் சுறாக்கள் வந்தன. இப்போது மீனின் கூடு மாத்திரமே மிச்சம் இருந்தன. என்றாலும் சாப்பாட்டு மேசையில் மீதிச் சிதறல்களான பொறுக்குகளை அள்ளி வாயில் போட்டுக் கொள்கிறாப் போல சிலது அந்த எலும்புக் கூடடிலும் துருவிச் சுரண்டித் தேடின.
எதாவது செய்யுங்க. அவன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இனி அவன் மீனைக் காப்பாற்ற என்று எதுவும் கிடையாது.
வேறு எதையுமே அவன் யோசிக்கவில்லை. பேசாமல் துடுப்பு போட்டு வீட்டைப் பார்க்க ஒரு பயணம். அவ்வளவே.
படகே லகுவாகிப் போனது. அதன் முன்பக்கம் இப்போது சல்லென்று சுலபமான உற்சாகத்துடன் நீரைக் கிழித்துப் போகிறது. பக்கவாட்டில் கனமே இப்போது இல்லையே.
படகு நல்லாதான் போகுது. அதுக்கு ஒரு சேதாரமும் இல்லை, என நினைத்தான். அந்த சுக்கான் திருகி, அதான் உடைஞ்சிட்டது. மத்தபடி மோசம் இல்லை. திருகி, அது வேற ஒண்ணு கிடைக்கும்.
நீரோட்டம் மாறி இப்போது தன் பகுதிக்குள் வந்தாப் போல உணர முடிந்தது. கடலோரக் குடியிருப்புகளில் இருந்து வெளிச்சம் காண முடிந்தது. இப்ப எங்க இருக்கோம், என்று அவனுக்கு விளங்கியது.
இனி வீடடைதல் பெரிய விவகாரம் இல்லை!

தொ ட ர் கி ற து
91 97899 87842 - storysasnkar@gmail.com

Friday, August 19, 2016

The old man and the sea
பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்


பகுதி பதினொன்று
••
ஒரு மனிதனை அழித்து
விடலாம். ஆனால் அவனைத்
தோற்கடிக்க முடியாது!
••

வனது மீன் இப்போது கடித்துக் குதறப்பட்டு விட்டது. அதைப் பார்ப்பதையே அவன் தவிர்க்க விரும்பினான். ஐயோ சுறா அதைத் தாக்கிய போதே அவன் தானே தாக்கப் பட்டாப் போல உணர்ந்தான்.
ஆனால் என்மீனைத் தாக்கிய அந்த சுறாவை நான் கொன்று விட்டேன்!... என்று நினைத்தான். சாதாரண சுறாவா அது? நான் பார்த்த தென்தூசோக்களிலேயே*** (**  ஸ்பானிய மொழியில் தெத்துப்பல் ஆத்மா) மகா பெரிய சுறா அது.
கடவுளே அறிவார், நான்தான் எத்தனை பெரிய பெரிய மீன்களைப் பார்க்கிறேன்! ஊருக்குப் போய்ச் சொன்னால் யாரும் நம்புவார்கள், என்றே சொல்ல முடியாது.
அதை எதிர்த்து செயிப்பதாவது, என்று அவனே நினைத்தான். ஆனால் செயித்தேனே. யார் நம்புவார்கள்? நானே நம்பவில்லை.
இதுவே கனவாட்டம் தான் காணுகிறது. எனக்கு என்னவோ, நான் தூண்டில் இரையைக் கூட கொக்கியில் இடாமல், என் கட்டிலில் செய்தித்தாள்கள் மேல் அனந்த சயனத்தில் இருக்கிறேனா இப்போது?
“ஆனால் மனிதன்!... அவன் தோற்கப் பிறந்தவன் அல்ல!” என்றான். “ஒரு மனிதனை அழித்து விடலாம். ஆனால் அவனைத் தோற்கடிக்க முடியாது!”
இன்னாலும், அந்த மீனை நான் கொன்னுட்டது, மன்னிப்பு கேட்க வேண்டிய சமாச்சாரம் தான், என நினைத்துக் கொண்டான்.
இப்போது, இனி... கெட்ட நேரம் ஆரம்பிக்கிறது. என்னிடம் கைவசம் ஈட்டி கூட இல்லாமல் ஆயிற்று.
தென்தூசோ கொடூரமானது. திறமையானது. பலமானது. அறிவானதும் கூட. ஆனால் அந்த சமயம், நான் அதைவிட மேதமையைக் கையாண்டேன்!
ம்ஹும், என்று தன்னையே மறுத்துக் கொண்டான். என்ன, என்கிட்ட அதனிடம் இருக்கறதை விட நல்ல ஆயுதம் இருந்ததோ என்னவோ? தென்தூசோ இறந்து விட்டது. நான் ஜெயித்தேன்.
“அதெல்லாம் இப்ப எதுக்கு வாத்தியாரே!” என்று சத்தமாய்ச் சொன்னான். “பேசாம படகில் போயிட்டே இரு. யோசிக்க வேணாம். வர்றது வரும்போது வரட்டும்.”
இல்லல்ல, யோசிக்கமால் எப்படி, என நினைத்தான். என்னிடம் இப்ப மிச்சமா வேற என்ன இருக்கு? கொஞ்சம் யோசனை. அப்பறம் ஆமாம், கழிப் பந்தாட்டம் பத்தி எதாவது நினைவில் பீராயலாம்.
சுறாவை மூளையிலேயே தாக்கினேனே, சூரன் டிமாகியோ அதைப்பத்தி என்னமாதிரி பாராட்டுவான்?
ச். அதொண்ணும், பெரிய சமாச்சாரமா என்ன?... என நினைத்தான். அதை எவனும் செய்துருவான். ஆனால், ஏ நீ என்ன? எலும்புக் குத்து, அத்தோட ஒருத்தன் சாதிக்கிறான். என் கையின் சிராய்ப்புகள், அதுவும் எலும்பு வலியும் ஒண்ணா என்ன?
அட யாருக்குத் தெரியும்? எனக்கு குதி எலும்பில் கோளாறு எதுவும் வந்ததே இல்லையே. ஒரே ஒருமுறை ஒரு நட்சத்திர மீனைத் தெரியாமல் ஏறி மிதித்து விட்டேன் நீந்திப் போகையில், காலே முட்டிக்குக் கீழே சுளுக்கினாப் போல ஆயிட்டது. வலின்னா அப்பிடி ஒரு தாளமுடியாத வலி.
“அட என்னப்பா நீயி, எதாவது உற்சாகமா நினைச்சிக்கக் கூடாதா?” என்று சொல்லிக் கொண்டான்.
“இங்க பார். நீ ஒவ்வொரு நிமிஷமா உன் வீட்டை நோக்கி நகர்கிறாய்! நீ இழுத்துட்டுப் போறியே, அந்த எடையில், நல்ல விசயம் அப்போவ், இப்ப ஒரு நாற்பது பவுண்டு கம்மி ஆயிட்டது!”
நீரோட்டத்தின் உட் பகுதிகளில் கடந்து போகும்போது என்னென்ன நடக்கும், எல்லாம் அவன் அறிவான். ஆனால் அதுகுறித்து அவன் 'இப்போது' செய்வதற்கு எதுவும் இல்லை தான்..
“எதுவுமே இல்லையா? ஏன் இல்லாமல்? இருக்குது,” என்று கூவினான். “நானே புதிய ஆயுதத்தை ஏற்படுத்திக் கொள்வேன். என் கத்தி, அதைத் துடுப்புடன் இணைத்துக் கட்டிக் கொள்வேன்!”
பாய்மரத்தின் சுக்கான் திருகியைப் பிடித்துக் கொண்டு அதன் துணியைக் காலில் மிதித்து தேவைக்குக் கிழித்தபடி படகோடு கத்தியைப் பிணைத்துக் கட்டிக்கொண்டான்.
“இப்போ?” என்று சொல்லிக் கொண்டான். “இப்பவும் நான் வயசாளி தான். ஆனால் என் கையில் இருக்கிறது ஆயுதம்!”
புத்துணர்வுடன் வீசியது காற்று. பயணம் சுகமாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. தான் வேட்டையாடிய மீனின் முன்பகுதியை மாத்திரம் பார்த்தபடி வந்தான் அவன்.
மெல்ல தன்னைத் தேற்றிக் கொண்டு வர வேண்டி யிருந்தது.
நம்மளை நம்மளே நம்பாமல் எப்படி அப்பா, என நினைத்தான். நல்லது நடக்கும்ன்ற நம்பிக்கை இல்லாமல் வாழறதே பாவம் இல்லியா?... பாவங்களைப் பத்தி இப்போ நினைக்க வேண்டாம், எனத் தோன்றியது.
பாவத்தை விட, இங்கே போதுன்ற அளவு பிரச்னைகள் இருக்கின்றன. தவிரவும், பாவம்னா என்னப்பா? அது பத்தி எனக்கு எதுவும் புரியறது இல்லை.
,இந்த பாவ புண்ணிய சமாச்சாரம் எனக்கு விளங்கறதும் இல்லை. நான் அதை நம்பறதுங் கிடையாது. ஒரு மீனைக் கொல்வது, ம், ஒருவேளை அது பாவந்தானோ என்னவோ? நான் பிழைத்திருக்கவும், நிறைய மத்த மனுசாளுக்கு உணவு எனவும் நான் அதைக் கொன்றிருக்கலாம்.. என்பதால் அது பாவம் இல்லை, என்று சொல்லிற முடியாது.
அப்பிடில்லாம் பாக்க முடியாது. அப்பறம் எல்லாக் காரியமுமே பாவக் கணக்கில் வந்துரும்.
இப்ப பாவம் பத்திய யோசனை என்னத்துக்கு? வேணாம். கதையெல்லாம் முடிஞ்சாச்சி. இப்ப அதைப் பத்தி யோசிக்கறது சரி கிடையாது.
சில பாவ காரியங்களைச் செய்யவே கூலி கொடுக்கவும் ஆள் இருக்கு. காசுக்காக, காசு வாங்கிக்கிட்டு பாவம் செய்றாங்களே, அவங்க யோசிக்கலாம் பாவம் பத்தி.
இங்க பார். நீ மீனவன். மீனவனாகப் பிறந்திருக்கிறாய். இந்த மீன் மீனாகப் பிறந்திருக்கிறதே, அதைப் போலத்தான். மீனவன் மீன்பிடிக்க பாவம் பார்க்கலாகாது!
சான் பெத்ரோவும் மீனவன் தான். சூரன் டிமாகியோவின் அப்பா, அவனும் தான் மீனவன்...
நினைவு பிடி நழுவி எங்கெங்கோ அலைகிறது. தன் சார்ந்த எல்லா விஷயங்களையும் அலசி அசைபோட்டுப் பார்க்க விரும்பினான் கிழவன். ஒரு செய்தித்தாளோ, புத்தகமோ துணை, என்று இல்லை. வாசிக்க எதுவும் இல்லை. வானொலிப் பொட்டியும் கிடையாது. மனசு என்னமாச்சிம் மாத்தி மாத்தி யோசனையில் ஊடாடிக் கொண்டே வந்தது.
பாவம் பத்தி திரும்பத் திரும்ப எதாவது நினைவு ஓடியது.
கொன்னா பாவம் தின்னா போச்சு!
மீனைக் கொல்லுகிறோமே, அது நம்ம வாழ்க்கைக்காகவா, அல்லது பிறத்தியாருக்கு உணவு என்பதற்காகவா? அவ்வளவுதானா, என்று யோசித்தான். உனக்கு அதை வேட்டையாடுவதில் ஒரு திமிரார்ந்த பெருமை. நீ மீனவன். உனக்கு இப்படி மீனைப் பிடித்து வருவதில் ஒரு கெத்து, குஷி இருக்கிறது. அது, அந்த நிமிர்வு உனக்கு வேண்டியிருக்கிறது!
மீனை அது உயிரோடு இருக்கையில் நீ நேசிக்கிறாய். அது இறந்த பின்னும் நேசிக்கிறாய் அதை. அதைத்தான் நீ விரும்புகிறேன் என்கிறாயே? அப்படி விரும்பியதைக் கொல்வது? அது பாவம் இல்லையா? பாவத்தை விட பெரிய வார்த்தை கூட அதற்குச் சொல்ல வேண்டும்!
“ரொம்ப மனசை ஓடவிடறே வாத்தியாரே!” என்று உரக்கப் பேசினான்.
இந்த மீனை விடு, அந்த தென்தூசோ, அதை நீ ஆனந்தமாய்ச் சாவடித்தாய். அதுவும் உயிர்ப்புடன் மத்த மீனாட்டம் கடலில் வாழ்கிறது. அது ஒண்ணும் அழுகிய மிச்ச சொச்ச நிணத்தைப் பொறுக்கித் தின்கிற தோட்டி இல்லை. மேக் வகை மீன்கள், மத்த சுறாக்களைப் போல எது கிடைச்சாலும் பசி பசின்னு அலையிற இனமுங் கிடையாது.
மேக் அழகான இனம். உத்தமமான இனம். அதுக்கு எதையிட்டும் கிஞ்சித்தும் பயம் கிடையவே கிடையாது.
“அது சரிடா. நான் அதைத் தற்காப்புக்காகத்தானே கொல்ல வேண்டி வந்தது?” என்று கத்தினான். “என்ன அருமையான முறையில் கொன்னேன்?”
அதைவிட, என்று யோசனை நீண்டது. இந்த லோகத்தில் எந்த உயிரும் மத்த உயிரைக் கொல்லவே செய்கிறது, எதோ விதத்தில். இந்த மீன்பிடி தொழில், என்னை எவ்வளவு வாழ வைக்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத அளவில் சாவடிக்கிறது, இல்லையா?
ஆனால் அவ்வளவுதானா? எல்லாமே நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தானா என்ன? அந்தப் பையன், அவன் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கவில்லையா? அவனால் எனக்கு என்ன தொந்தரவு? எதுவும் இல்லை.
சும்மாங்காட்டியும் உன்னை நீயே வருத்திக்கக் கூடாது அப்பனே...
முன் குனிந்து மேக் கடித்துப் போன சதையின் ஒரு விள்ளலைப் பிய்த்தான். அதன் சதைத் தரத்தை நல்ருசியை நன்றாகச் சுவைத்து உணர்ந்தான். இறுக்கமாவும் ரசம் ஊறினாப் போலவும் வாய்க்குள் ருசித்தது. மாமிசம் தான். ஆனால் சிவப்பு தட்டவில்லை அதில்.
பதமான தசை தான். சந்தையில் மிக அதிக விலை போகும், என்றிருந்தது. ஆனால் தண்ணியில் இருக்கும் வாடை, கூடவே காற்றில் வரும் அதன் வாடை. அதைத் தவிர்க்க வழி இல்லை. அதனால்... அவனுக்கு நன்றாகத் தெரிகிறது.
கடுமையான தருணங்கள் காத்திருக்கின்றன
காற்று நிதானமாய் வளைய வந்தது. வடகிழக்கு வசத்தில் அது மேலும் பின்வாங்கிக் கொண்டிருந்தது. அடங்காமல் ஒடுங்காமல் அப்படியே வீசியபடி பயணத்துக்கு ஒத்தாசையாய் இருக்கும்,.. என அவனுக்குத் தெரியும்.
தன் முன்வாட்டத்தில் கிழவன் தேடிப் பார்த்தான். படகு எதுவும் இல்லை. எந்தப் பெரிய கப்பலின் முக எடுப்பும் தட்டுப்படவில்லை. எதுவும் கப்பல் அந்தப் பக்கமாகப் போனால், அதன் நீராவிப் புகை வரும். அது கூட காணவில்லை.
படகின் முன் பகுதியில் பறக்கும் மீன்கள்தான் இடது வலது பக்கங்களில் துள்ளிச் சிதறின. மஞ்சள் நிற கல்ஃப் பாசி மிதந்து கொண்டிருந்தது.
அட, பறவை ஒண்ணு கூட கண்ணில் படவேயில்லை.
ஒரு ரெண்டுமணி நேரம் போல இப்படியே போய்க் கொண்டிருந்தான். படகின் பின்வசத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். அப்பப்ப அந்த மார்லின் மீனைக் கொஞ்சம் விண்டு சுவைத்தான்.
ஓய்வு முக்கியம். அப்பதான் திரும்ப பலத்தைத் திரட்டி வேலை செய்ய முடியும்.
ஒன்றாக வந்தன இரண்டு சுறாக்கள் அவற்றில் முதலாவதை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது இப்போது.
”ஏய்!” என்று கூச்சலிட்டான். அந்த உணர்ச்சித் தெறிப்பை மொழியில் மாற்றம் செய்ய இயலாது. தானறியாமல் கலவரத்தில் வாய் உதிர்த்த ஒலி அல்லது வலி. பலகையில் அவன்கையைப் பிடித்துவைத்து ஆணி இறக்குகிறாப் போன்ற வலி அது.
“கலனோக்கள்!” என்று கூச்சல் இட்டான். முதல் செதிளைத் தாண்டி பின்னால் இதோ ரெண்டாவது செதிள் கிளம்பி மேலே வருகிறதைப் பார்த்தான். மண்வாரியாய் பழுப்பு மூக்கு கொண்ட சுறாக்கள் அவை... என அடையாளம் கண்டுகொண்டான். துடுப்புகள் முக்கோணமாய் இருந்தன. வாலால் நீரை அளைந்து பெருக்கியபடி வந்தன அவை.
ரத்த வாடை எட்டி அவை பரபரப்புடன் மேலே வந்திருந்தன. இருந்த பசியினால் அந்தப் பரபரப்பில் அவற்றுக்கு வாடையே எட்டாமல் திண்டாடின, என்றாலும் இரையை, இந்த மீனை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தன.
பெரியவர் தயாரானார்.
பாய்மரத்துணிக் கிழிசலை சுக்கான் திருகியால் இறுக்கிக் பிடிக்க வசதியாய்ப் பொருத்திக் கொண்டார். இப்போது கத்தியைக் கட்டிய துடுப்பினை இத்துடன் சேர்த்துக் கட்டிக் கொண்டார்.
முடிந்த அளவு லகுவாக அதை உயர்த்திக் கொண்டார். கைகளில் அபார வலி இருந்தது. மேலே கையைத்தூக்க அவை ஆட்சேபித்தன.
விரல்களால் அந்த ஆயுதத்தைப் பிடித்தும் நெகிழ்த்தியும் கையை வேலைக்கு ஏதுவாகக் கொண்டுவர முயன்றார். அந்த வலியில் அந்த அழுத்தம் கைக்குப் பழக வேண்டும், என்கிற சிறு பயிற்சி.
பிறகு படகை நோக்கி சுறாக்கள் வருவதைக் கவனிக்கலானார். பரந்த தட்டையான மண்வாரித் தலைகளைப் பார்க்க முடிந்தது. பக்கவாட்டு செதிள்கள் ஓரங்களில் வெண்மைப்பாடாய்க் கண்டன.
வெறுப்புக்குரிய சாதி அவை. மோசமான நாற்றம் பிடித்த சுறாக்கள். கிடைத்தது எதுவானாலும் வர்ஜியா வர்ஜியம் இல்லாமல் முழுங்கும் தோட்டிகள். மனுசாளைக் கொல்ல வல்லவை அவை. பசியாயிட்டால், துடுப்பைக் கூட, படகுப் பலகையைக் கூட விட்டு வைக்காது.
இந்த சுறாக்கள் தான், மேல்மட்டத்தில் ஆமைகள் தூங்கிக் கொண்டிருக்கையில் வந்து அவற்றின் கால்களையும், நீந்த உதவும் ஜவ்வுச் சதைகளையும் கவ்விக் கொள்ளும். தண்ணீரில் மாட்டிய மனிதனைப் பாய்ந்து தாக்கி விடும். பசித்த பொழுதுகளில், மனிதனிடம் மீன் வாடையோ, மீனின் ரத்த வாடையோ இல்லா விட்டால் கூட பாய்ந்து கதறக் கதறக் குதறி விடும்.
”ஏய்!” திரும்ப கூவினார் பெரியவர். “கலனோக்களே, வாங்க கலனோக்களே.”
வந்தன. ஆனால் மேக் வந்ததே அதைப்போல வரவில்லை.
ஒன்று திரும்பி படகுக்கு அடியில் போய் முட்டியதில். படகே கிடுகிடுவென்று ஆட்டம் கொடுத்தது. அப்படியே கீழ் நிலையிலேயே அது துள்ளி மீனை இழுத்துக் கடிக்கப் பார்த்தது.
மத்தது நீள்துவாரம் போன்ற மஞ்சள் நிறக் கண்களுடன் பெரியவரைப் பார்த்தது. பின் வேகமாக முன்னேறி வந்தது. தாடை பாதி வட்டமாய் அகலவாக்கில் விரிய எட்டி வந்தது. மீன் ஏற்கனவே கடிபட்ட பகுதிக்குக் குறி பார்த்திருந்தது அது.
அதன் பழுப்பு நிற மண்டையில், அதுவும் தாண்டிய முதுகுப் பிரதேசத்தில் கோடுகள் தெளிவாய்த் தெரிந்தன. மூளையும் முதுகுத் தண்டும் சேரும் அந்த இடத்தை அவரால் அடையாளங் காண முடிந்தது. அந்தப் பகுதியைக் குறி பார்த்து கத்திகட்டிய துடுப்பைச் செலுத்தினார். ஒரு குத்து. திரும்ப வாங்கிக்கொண்டார். இப்போது  பூனையுடையதைப் போன்ற அதன் மஞ்சள் கண்ணில் பாய்ச்சினார்.
சுறா, மீனை விட்டுவிட்டு அப்படியே நழுவியது. வாயில் மீனைக் கடித்த மாமிசத்துடன் அப்படியே மரித்தது.
படகே இன்னும் ஆடிக் கொண்டிருந்தது. அந்த மத்த சுறா படகை உண்டு இல்லை என்று மோதிக் கொண்டிருந்தது. படகு அடிப்புறமிருந்து எட்டி அது மீனைக் கவ்வி உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது.
பெரியவர் பாய்மரத் துணியை இறக்கிவிட்டார். படகு இப்போது அகலவாக்கில் ஆட்டங் கொடுக்க இது உதவியது. இப்போது அந்த சுறாவை அது தண்ணீரில் இருந்து வெளியே காட்டும் என ஒரு கணக்கு.
அந்த சுறாவைப் பார்த்ததும் முன் பக்கமாக பக்கவாட்டில் அவர் குனிந்தார். அந்த சுறாவைக் குத்தினார். வசம் கிடைக்கவில்லை. அதன் பக்கவாட்டு சதையில் தான் அவரால் கத்தியைப் பாய்ச்ச முடிந்தது. அதன் உட்பக்கம் இறுகி பாறைச்சதையாய் இருந்தது. கத்தி அதன் உடபுக்குள் புகவே இல்லை.
இந்தக் குத்தல் முயற்சியில் கையும், தோளுமே வலியெடுத்தன. என்றாலும் சுறா வேகமாக மேலே வந்தது. மேலாகத் தலையைக் கொணர்ந்தது. தட்டையான அதன் மண்டையில் ஓங்கி நடுப்புறமாய்க் குத்தினார் கத்தியால்.
மூக்கை வெளியே நீட்டி அது மீனுக்குப் பாய்ந்திருந்தது. ஒரு குத்து. பெரியவர் திரும்ப கத்தியை உருவிக் கொண்டார். முன்பு குத்திய அதே புள்ளியில் திரும்பக் குத்தினார்.
மீனைக் கவ்விய நிலையில் சுறா அப்படியே நின்றது. பெரியவர் அதன் இடது கண்ணில் கத்தியைப் பாய்ச்சினார். அப்பவும் சுறா பிடியைத் தளர்த்தவில்லை.
“விட மாட்டியா நீ?” என்றார் பெரியவர். அதன் முதுகுத் தண்டுக்கும் மூளைக்கும் இடையே கத்தியைப் பாய்ச்சினார். இப்போது அந்தக் காரியம் அத்தனை சிரமந் தரவில்லை. சட்டென சதை கிழிந்து பொங்கியதை உணர முடிந்தது.
துடுப்பை கத்திவசம் இல்லாமல் திருப்பிப் பிடித்துக்கொண்டார். சுறாவின் தாடைகளுக்குள் செலுத்தி அது மீனைக் கவ்விப் பிடித்திருந்த பிடியை விடுவித்தார். வாய்க்குள் துடுப்பை ஓட்டி குடைந்தபோது சுறா பிடியை நழுவ விட்டு தண்ணீரில் அமுங்கியது.
“போய்ததொலை கலனோ, ஒரு மைல் அடியாழம் போய்ச்சேர். போய உன் கூடவந்ததே அந்த சிநேகிதியைப் பார். அல்லது  உன் அம்மையோ?”
கத்தியைத் துடைத்துவிட்டு துடுப்பைக் கீழே சாத்தினார். திரும்ப பாய்மரக் கொடியைச் சுற்றி அதை ஏற்றிக் கொண்டார். படகு தன்னிலை மீண்டு நிதானத்துக்கு வந்தது.
மீனின் மொத்தத்தில் கால் பங்கை இதுங்க எடுத்திருக்கும் போலுக்கே?” என்று கத்தினான். “இருந்ததுல நல்ல சதைப் பகுதிகள் காலி...”
“ஹ்ம். இது கனவாகவே இருந்திருக்கலாம். இதை நான் பிடிக்காமலே இருந்திருக்கலாம். இப்பிடி ஆயிட்டதே, என்னை மன்னிக்கணும் நீ மீனே, இப்ப எதுவுமே சரியா வரல்ல.”
மேலே பேச முடியாமல் நிறுத்தினான். திரும்ப அந்த மீனைப் பார்க்க அவனுக்குத் திராணி இல்லை. ரத்தம் பூராவும் வெளியேறி உலர்ந்து போய், கழுவி விட்டாப் போல இருந்தது மீனின் மிச்சம். ஒரு கொல்லுப் பட்டறையில் வெள்ளி மெருகுபோட்டாப் போல வெளிறிக் கிடந்தது. உடலின் வரிகள் தெரியத்தான் செய்தன.
“நான் கடலுக்கு அத்தனை உள்ளாறன்னு போயிருக்க வேண்டாமோ என்னமோ, மீனே” என்றான். “அது உனக்கும் நல்லதா அமையல, எனக்கும் அமையல. என்னை மன்னிக்கணும் நீ மீனே...”
“சரி. இப்ப...” என தனக்குள் சொல்லிக் கொண்டான். “கட்டி வெச்சிருக்கிற கத்தியைப் பார். துணி நைந்து அத்துக் கிடக்கா பார்த்துக்கோ. ஏ உன் கையை உஷார் பண்ணிக்க. ஏன்னால், இன்னும் ஆபத்துகள் வரத்தான் வரப் போகிறது.”
“இந்தக் கத்திக்கு பதில் ஒரு கல் மாதிரி எதும் இருந்தால் நல்லா யிருந்திருக்கும்” என்றான் அவன். துடுப்பில் கட்டியிருந்த கத்தியை சரிபார்த்தபடியே பேசினான். “ஒரு கல் எடுத்திட்டு வந்திருக்க வேண்டும் நான்.”
அப்படியே வெறுன்ன படகில் ஏறி வந்திட்டே. எத்தனை சாமான்கள் நீ கொண்டு வந்திருக்கலாம், என நினைத்தான். பட்டியல் கிடக்கட்டும், நீ எதுவுமே எடுத்திட்டு வரல்லியே எய்யா.
அட இப்ப என்னென்ன இல்லைன்னு பாத்திட்டிருக்கறதா? இப்ப என்ன செய்ய நம்மால முடியும், அதுக்கு நம்ம கிட்ட என்ன இருக்கு, அப்படித்தான் யோசிக்கணும்.
“நல்லா தான் யோசனைல்லாம் சொல்கிறாய், போகாத ஊருக்கு வழி!” என்றான் சத்தமாய். “உன் அறிவுரைகள், எனக்குக் காது வலிக்குதுடா மனசே.”
சுக்கான் திருப்பியைக் கையடியில் வைத்துக் கொண்டான். ரெண்டு கையையும் கடலில் கழுவிக் கொண்டான்.
படகு முன்னெடுப்பாய்ப் போய்க் கொண்டிருந்தது.
*
தொ ட ர் கி ற து

91 97899 87842 storysankar@gmail.com