Friday, July 29, 2016

பெரியவர் மற்றும் கடல்

எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

பகுதி ஐந்து

••
நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை
மதிக்கிறேன் மீனே... ஆனால்...
••

னால் இப்ப இந்த நிமிஷம், உதவிக்கு பையன் இல்லை. கூட உதவிக்குன்னு உனக்கு, ஆள் அம்பு படை பரிவாரம், எதுவும் இல்லை. எல்லாம் நீயே. பேசாமல் நீயே... என்ன செய்யலாம்? அந்தக் கடைசித் தூண்டிலையும் இப்பவே இந்த இருட்டிலேயே அறுத்து எறிந்து விடலாம். அந்த ஒரு காரியத்தை முடிவு பண்ணியாச்சின்னால் அதைத் தள்ளிப் போடறது எதுக்கு? இருட்டிக் கிடக்கோ, வெளிச்சத்திலோ, அதைக் காலாகாலத்தில் செய்துறலாம் இல்லே? சடார்னு எடு கத்தியை. அந்த ரெண்டு தூண்டிலையும் தரித்துப் போடு. அந்த ரெண்டு கண்டுகளையும் இத்தோடு இப்பவே சேத்துக்கோ. தயாராய் இரு.
சரி என்று அந்தச் சோலியில் இறங்கினான் கிழவன். மகா இருட்டாய்க் கிடந்தது. வேலை செய்ய சுலபமாக இல்லை.
அவன் வேலை செய்து கொண்டிருக்கையில் திடுதிப்பென்று ஒருதடவை உள்ளேயிருந்து அந்த மீன் சிறிது அசங்கியது. அவன் எதிர்பார்க்காத சமயம் அவனை அப்படியே ஒரு சுண்டு சுண்டி தரையில் விழுத்தாட்டியது. குப்புறத் தட்டி விழுந்தான் அவன். கண்களின் கீழே சட்டென ஒரு கீறல் விழுந்து ரத்தங் கொட்டி கன்னம் வரை வழிந்தது. என்றாலும் அது நாடி வரை வழியுமுன் உலர்ந்தும் விட்டது. அதை சட்டை செய்யாமல் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
மீனின் பிடி உள்ள கயிறை இன்னும் வசம் பார்த்து தோளில் பொருத்திக் கொண்டு வேலை செய்தான். தோளில் மீனின் கனம் தெரிந்தது. கையின் அழுத்தத்தில் படகின் நகர்ச்சியும் உணர முடிந்தது.
திடீர்னு அப்படி ஒரு குலுக்கு குலுக்கிட்டதே... எதுனால அப்பிடி நடந்துக்கிட்டதோ அது, தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கம்பிக்கயிறு சிறிது நழுவி அதன் முதுகுச் சிகரத்தில் உரசிச் சரிந்திருக்கலாம். அதுக்கு வலித்திருக்கலாம். இன்னாலும், என் தோள் வலி அதை விடவா உனக்கு வலிக்கப் போகிறது, என நினைத்துக் கொண்டான்.
தோள்ப்பட்டை கழண்டு விடுவது போல் வலி துவட்டி எடுத்தது.
ம். எது எப்பிடின்னாலும், இந்த மீன், இது இபபிடியே இந்தப் படகை இழுத்துக்கிடடே போய்க்கிட்டே இருக்க முடியுமா? முடியாது. அது பெரிய மீனா இருக்கலாம். ஆனாலும் எல்லாத்துக்கும் முடிவுன்னு ஒண்ணு வந்தாகணும்.
ம். நான் அதற்குத் தயார். என் சார்பில் நான் இந்த ஹோதாவுக்குத் தயார் ஆகிவிட்டேன். எனக்குப் பிரச்னை தரும் என்கிற மாதிரி விஷயங்களை நான் சரி செய்துகொண்டு விட்டேன். கையிருப்பில் நிறைய கம்பிக் கயிறுகள் இருக்கிறது. சேர்த்து விட்டேன். சேமித்து விட்டேன். என்னால் ஆன அத்தனை ஏற்பாடுகளையும் நான் செய்து கொண்டாகி விட்டது!
"மீனே!" சத்தமாய்ப் பேசினான். "நான் உன்னோடவே கூட வருவேன். இருப்பேன் உன் கூட. என் மரணம் வரை கூட இருப்பேனாக்கும்!"
அதுவும் என்னுடன் இருக்கும், என நினைக்கிறேன். அப்படி இருவருமாக இருக்க நேர்ந்தால், வெளிச்சம் இருந்தால் நல்லது. நான் வெளிச்சம் வர காத்திருப்பேன்.
விடியலின் ரேகைகள் நுழைய நேரம் இருந்தது. குளிராய்க் கிடந்தது வெளி. படகுச் சுவரில் முதுகைக் கிடத்திக் கொண்டான். மரம் ஓரளவு கதகதப்பு தரும்.
இந்த நாடகத்தை... நானும் தொடர்வேன். அது தொடர்ந்தால் நானும் அதைத் தொடர்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை...
தூண்டில் கயிறு. ஒரே தூண்டில்தான் இப்போது. அது தொங்கி மேலே போய் அப்படியே உள்ளே தண்ணீருக்குள் இறங்குவது, சாம்பல் வெளிச்சத்தில் அடையாளப் பட்டது. படகு நிதானமான பயணத்தில் இருந்தது.
சூரியனின் முதல் கிரணம் மெல்ல எழுந்தது. அவன் வலது தோள்ப் பக்கம் இருந்து. அவன் மேற்கே பார்த்தபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.
"இப்போது அந்த மீன் வடபுலமாக புலம் பெயர்கிறது" என்றான் கிழவன். நீரோட்டம் எங்களை தூரமாய் கிழக்குமுகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது, என எண்ணிக் கொண்டான்.
ம். பார்க்கலாம். அது நீரோட்டத்தோடு பயணப் பட வேண்டும். அப்படி அது நீரோட்டத்தோடு ஒத்திசைவுக்கு மாறினால், அதற்கு உடல் அலுத்து வருகிறது, என்று தெரியும் எனக்கு.
சூரியன் இன்னும் மேலே நகர்ந்திருந்தது. அவனுக்கு இப்போது புரிந்தது. மீன் அயர்ச்சி காட்டவே இல்லை!
அவனுக்கு சாதகமான ஒரே அம்சம், அந்தத் தூண்டில் கம்பியிழைகளின் சாய்வில் தெரிந்தது... இப்போது மீன் கொஞ்சம் போல மேல் மட்டத்துக்கு வந்திருக்கிறது!
அப்படின்னால்? உடனே ஒரு துள்ளல். துள்ளப் போகிறது, என்று இல்லை.
ஆனாலும் அதுவும் சாத்தியமே!
"ஆண்டவரே, அதைத் துள்ளப் பண்ணும்" என்றான் கிழவன். "இப்போது அதைச் சமாளிக்க என்னிடம் போதுமான கம்பிக்கயிறுகள் இருக்கிறது."
ஒருவேளை, இந்தக் கயிறை இன்னும் நான் இறுக்கினால், அது மீனை இம்சைப்படுத்தி அதைத் துள்ளச் செய்யும்...
இப்ப நல்லா வெளிச்சம் வந்தாச்சி. வெளியே வரட்டும். துள்ளட்டும். முதுகு எலும்புப் பக்க செதிள்களில் முழுக்க காத்தை அது நிரப்பிக்கட்டும். அப்புறம் அதனால் ரொம்ப ஆழம் உள்ளே முங்க முடியாது. சாகணும்னால் கூட மேல்பகுதியில் தான் அது நிகழ வேண்டும் அதற்கு..
கயிறை தன் பக்கமாக வலித்துக்கொள்ள முயற்சி செய்தான். இழுத்த இழுப்பில் அந்தக் கயிறே அறுந்துவிடும் அளவுக்கு விரைத்திருந்தது. கீழே கொக்கியில் மீன் இருக்கிறது. அது மேலே அவனைத் தூக்க, இழுக்க விடவில்லை. இதற்குமேல் இழுத்தால் கயிறு முடி அறுந்துவிடும்.
இனிமேல் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் கயிறை, என நினைத்தான். இனி அதை இன்னொரு முறை அசக்கிவிடக் கூடாது.
இந்தக் கயிறின் இறுக்கத்தில் இனி நான சிறிது அசக்கினாலும் அதன் வாயில் கொக்கி இன்.னுமாய் அதன் உள்வாயைக் கீறும், என்று தோன்றியது. அது ஒருவேளை வாயில் இருந்து வெளியே வந்துவிடவும் கூடும். அது மேலே எழும்பித் துள்ளும்போது கொக்கியை அது வெளியே துப்பி விடுகிறாப் போலவும் ஆகிவிடலாம் அல்லவா?
எத்தனை விதமான சிக்கலை யெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது... இருக்கட்டும். சமாளிக்கலாம்.
இப்போது சூரியன் எழுந்துவிட்ட நிலையில் எனக்கு புதிய தெம்பு ஊறியிருக்கிறது. இப்போது அது கண்ணைக் கூசச் செய்கிற நிலை தாண்டி மேலேறி விட்டது. ஆக அந்தத் தொந்தரவும் இல்லை.
ஒரு மஞ்சள் கொடி தூண்டிலோடு சேர்ந்து இழுபட்டு கூடவே வந்தது. அது ஒண்ணும் ரொம்ப எடை இல்லை. அதனால் பரவாயில்லை, என்று இருந்தது. இருக்கட்டும். ராத்திரியில் கல்ஃப் வளைகுடாவில் மிதக்கிற அந்த மஞ்சள் கொடிகள் பளபளவென்று ஒளிரும். இருட்டுக்கு ஊடே அது நல்ல விஷயம் தான்.
"மீனே!" என்று கூப்பிட்டான் அவன். "நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை மதிக்கிறேன் மீனே... ஆனால்... ம்... இன்றைக்கு பொழுது அடையுமுன்னால்... நான் உன்னைக் கொல்வேன்!"
அது முடியும்னு நம்பலாம், என நினைத்துக் கொண்டான் தனக்குள்.
*
வலது வாட்டத்தில் இருந்து படகை நோக்கி சின்னப் பறவை ஒன்று வந்தது. இசைக் குரல் கொண்ட பறவை அது. படகுப் பக்கமாக நீரின் மட்டத்துக்கு அருகிலேயே தாழப் பறந்தது.
பறவையைப் பார்த்தான். அதுவே ரொம்ப களைத்திருந்தது.
பறவை மெல்ல வந்து படகின் விளிம்பில் அமர்ந்து கொண்டது. சிறு ஓய்வு. பிறகு திரும்ப அவன் தலையைச் சுற்றி வடடமிட்டது. அப்படியே போய்த் தூண்டில் கழியில், அந்த இடம் வசதியாய்ப் பட்டதோ என்னவோ, அங்கே பறந்து போய் அமர்ந்து கொண்டது.
"எத்தினி வயசாவுது உனக்கு பறவையே?" என்று கேட்டான் கிழவன். "இப்பதான் முத முதலா கடல்பக்கம் இவ்வளவு தூரம் பறக்கறியா?"
அவன் பேசும் குரல் ஒலியில் அவனையே பார்த்தது பறவை. அந்தத் தூண்டில், அதைக் கொத்தி அலகால் நோண்டிப் பார்க்கக் கூட அதனிடம் தெம்பு இல்லை. மகா அலுப்பாய் இருந்தது அது. அந்த மூங்கில் குச்சியின் மேல் அது தத்தித் தத்திப் போய் வந்தது. மென்மையான பாதங்களால் அந்தக் கயிறைப் பற்றிக் கொண்டது பறவை.
"தூண்டில் அசங்காமல் கொள்ளாமல் அப்பிடியே தான் இருக்கு" என்றான் கிழவன் பறவையைப் பார்த்து. "அதெல்லாம் கெட்டியாத் தான் இருக்கு. பிடிச்சிக்க. என்ன நீ? நேத்தி கூட காத்து எதுவுங் கிடையாது. ராத்திரி நல்லா ஓய்வடுத்திருக்கலாம் இல்ல? இப்பிடி காலையிலேயே இத்தனை களைப்பா இருக்கே நீ? இந்தப் பறவைகள், அதுகளுக்கே தெம்பு அவ்வளவு தான் போல..." என்றான் அவன்.
இப்படி நீ பாட்டுக்கு இத்தனை தூரம் கடலுக்கு உள்ளே வந்திட்டே? கழுகுகள் உன்னைப் பார்த்தால் உடனே துரத்தி வந்துரும், என நினைத்துக் கொண்டான். ஆனால் அதனிடம் சொல்லவில்லை. எப்படியும் நான் பேசுவது அதற்கு புரியப் போவது ஒண்ணும் இல்லை.
நான் என்ன சொல்றது. கூடிய சீக்கிரம் கழுகுன்னா என்ன, வானத்தில் அதற்கான ஆபத்துகள் என்னென்ன, அதுவே கத்துக்கும்.
"இங்கியே நல்லா ஓய்வு எடுத்துக் கொள் சின்னப் பறவையே" என்றான் அவன். "அப்பறமாட்டு உன் வேட்டையை ஆரம்பி. ஒரு பறவையைப் போல. ஒரு மனிதனைப் போல. அல்லது ஒரு மீனைப் போல...."
நேற்றைய இரவின் குளிருக்கு அவனுக்கு முதுகு பிடித்துக் கொண்டிருந்தது. பறவையோடு பேசுவது சிறிது இதமாய் இருந்தது.
"இங்கியே, இதான் என் வீடு, இங்கியே கூட இருந்துக்கலாம் நீ பறவையே" என்றான். "என்ன ஒண்ணுன்னால், இப்ப என்னால பாய்மரத்தை ஏத்த முடியாது. பாய்மரம் இருந்தால் நீ அதில் ஒண்டிக்கலாம். அந்த உயரத்தில் நல்ல காத்து கிடைக்கும் உனக்கு. இப்ப எனக்கு வேறொரு சோலி கெடக்கு. என் கூட வேறொரு சிநேகிதக்காரன்..."
அதேநேரம் மீன் திரும்பவும் ஒரு குலுக்கு குலுக்கியது தூண்டில் கயிறை. கிழவன் நிலைதடுமாறி அப்படியே தூண்டில் மூங்கில் பக்கமாகக் குப்புறத் தள்ளாட்டப் பட்டான். படகின் சுவரோடு உரசினாப் போல அவன் சரிந்து விழுந்ததில் தப்பித்தான். தூண்டிலிலும் கொஞ்சம் கயிறு தழைய விட்டிருந்ததால் பிழைத்தான்... நேரே அவனைக் கடலுக்குள் தூக்கி வீசத் தெரிந்தது மீன்.
தூண்டிலில் அந்தச் சுண்டு சுண்டப்படு முன்பே பாடும் பறவை எழும்பிப் பறந்திருந்தது. அது எப்ப கிளம்பிப் போனது என்பதையே அவன் கவனிக்கவில்லை. இப்போது இன்னும் கவனமாய் அந்தக் கயிறை வலது கையால் அழுத்திப் பிடித்து வசம் பார்த்துக் கொண்டான். அப்போது தான் அவனது கையில் ரத்தத்தையே உணர்ந்தான்.
"கீழே, அதுக்கு என்னவோ காயம் கீயம் மாதிரி வலி வந்திருக்கும்" என்று சத்தமாய்க் கத்தினான் கிழவன். பேசிக் கொண்டே கயிறைப் பின் பக்கமாக இழுத்தான். மீனின் போக்கைக் கொஞ்சம் திருப்பி விடலாம், என நினைத்தான்.
கயிறு இழையிழையாய் நைந்து அறுந்துபோகிற இடத்தில் இழுக்கையில் இன்னும் எச்சரிக்கைப் பட்டு நிதானமாய் இழுக்க வேண்டி வந்தது. அப்படியே அந்த விரைப்பை வைத்துக் கொண்டான் இப்போது.
"இப்ப இந்தக் கயிறை... மேலே உன்னை இழுக்கிறதை, உணர முடியுதா மீனே?" என்றான் அவன். "வலிக்குது இல்லே? யேசுவே, எனக்கும் தான்."
அப்படியே வானத்தில் அந்தப் பாடும் பறவைக்குத் தேடினான். தனியே இந்நேரம் இப்படி இருப்பதே அவனுக்கு ஏக்கமாய் இருந்தது. பறவை, கூட இருந்திருக்கலாம், என்று இருந்தது.
பறவையே, நீ இங்க அதிகம் தங்கவில்லை. கிளம்பிப் போய் விட்டாய். போகிற வழி, கரையை எட்டுகிற வரை உன் பாடு அத்தனை சுலபம் கிடையாது. அது, உனக்குத் தெரிகிறதோ இல்லையோ, எனக்குத் தெரியும்.
ச். ஒரு க்ஷணம். அசந்தேன். அந்த மீன் என்னை வாரி விட்டுட்டது. உடம்பில் கீறி விட்டுட்டது. நான், என்ன இப்பிடி கிறுக்கன் மாதிரி நடந்துக்க ஆரம்பிச்...சிருக்கன்.
ஆமாம். அந்தப் பறவை, அது பத்தி ஒரு யோசனை. கவலை... தேவையா அது?
திரும்ப இனிமே நம்ம சோலியப் பாக்கணும்.
அத்தோட... அந்த டூனா. அதை இன்னும் நான் சாப்பிடவே இல்லை. உடம்பில் தெம்பு வத்திறப்டாது. அதுக்குமுன்னால அதைத் தின்னு தெம்பைத் தேத்திக்கணும்...
"சே பையன் இந்த சமயம் பார்த்து கூட இல்லாமல் ஆச்சே! இப்ப இந்த மீன், இதுகூட சேர்த்துக்க துளி உப்பு கூட இல்லை." சத்தமாய் கையறு நிலையில் கத்தினான்.
தோள் கனத்தது. தூண்டிலை வலது தோளில் இருந்து இடது தோளுக்கு மாற்றிக் கொண்டான். முன் நோக்கி குனிந்து மண்டியிட்டு கடல் தண்ணீரிலேயே கையைக் கழுவிக் கொண்டான்.
அப்படியே கடலில் முங்கியவசத்தில் கையை ஒரு நிமிஷம் போல அப்படியே வைத்திருந்தான். விரலில் பட்ட காயத்தில் இருந்து வழிந்த ரத்தம் ஒழுகி அடங்கியது.
நீரில் சிவப்பு கலந்து மெல்ல அந்த வண்ணமும் மறைந்து தெளிவான தண்ணீர். படகு ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீரும் தெளிவாக மாறி விட்டது. இரத்தக் கசிவு இப்போது இல்லை.
"மீனின் வேகம் கணிசமான அளவு குறைஞ்சிட்டது!" என்றான் அவன்.
இதமாய் இருந்தது காயத்துக்கு. அப்படியே இன்னுங் கொஞ்சம் வைத்திருக்கலாம் போல இருந்தது. ஆனாலும் இன்னொரு முறை மீன் குலுக்கினால்?... மீண்டும் விபரீதங்களுக்கு அவன் தயாராய் இல்லை.
திரும்ப எழுந்துகொண்டான். படகில் சிறிது சாய்ந்தாப் போல நின்றான். காயம் பட்ட விரலை சூரியனுக்குக் காட்டி உலர வைத்தான்.
கம்பிக் கயிறு, அதன் பிசிறு கீறிய வீரல் தான் விரலில். சதையைக் கிழித்து விட்டது கொஞ்சம். ஆள்காட்டி விரலில் காயம். வேலை செய்கையில் சிரமப் படுத்தும். அந்த விரலைத் தவிர்த்துவிட்டு மத்த விரலால் வேலை செய்ய முடியாது.
அவனது விரல்களுக்கு இன்னும் தேவை இருக்கிறது. வேலை இருக்கிறது. காத்திருக்கிறது. பெரிய காரியம் அது. அது இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் காயம்... நல்ல விஷயம் அல்ல. அவனுக்கு கட்டுப்படி ஆகாது இது.
"ம். சரி. இப்ப..." என்றான் அவன். கை உலர்ந்து விட்டது. "இது... நான் அந்தச் சின்ன டூனாவைச் சாப்பிடும் நேரம்" என்றான். "இங்கேயே இப்படியே வசதியாச் சாப்பிடலாம். டூனாவை துடுப்பால் எட்டி பக்கமாய் இழுத்துக் கொண்டால் ஆச்சு."
அப்படியே முன் மடிந்தான். துடுப்புத் தண்டின் அடியில் டூனா, தன் பக்கம் இழுத்தான் அதை. இடையே கயிறு சுருட்டிக் கிடக்கிறது. அதை அனுசரித்து மெல்ல தன் பக்கம் நகர்த்தி வர வேண்டியிருந்தது.
திரும்ப இடது தோளில் அந்தத் தூண்டிலைப் போட்டுக் கொண்டான். இடது கையாலும் விரல்களாலும் தரையைத் தடவி அந்த மீனை இழுத்துக் கொண்டான். துடுப்பின் கொக்கியில் இருந்து அதை விடுவிக்க வேண்டி யிருந்தது. திருமப துடுப்பை அதன் இடத்தில் வைத்தான்.
முட்டியில் மீனை வைத்துக் கொண்டான். மீனைத் திருப்பி தலை முதல் வால் வரை, நீள வாக்கில் சிவப்பு கொப்பளிக்கிற அளவில் அதன் சதையை வகிர்ந்தான். பிறகு முதுகுத் தண்டில் இருந்து வயிற்றுப் பக்கம் வரை முக்கோண முக்கோணத் துண்டங்களாக விண்டான். ஆறு கறித் துண்டங்களை இப்படி அறுத்து படகின் வில்லில் சூரியன் பட வைத்தான். கால்சராயில் அந்தக் கத்தியை அப்படியே துடைத்துக் கொண்டான்.
அவனிடம் கையில் இப்போது அறுபட்ட மீனின் எலும்புக் கூடு. வாலைப் பிடித்து அதை கடலுக்குள்ளே வீசி யெறிந்தான்.
"ம்ஹும். என்னால இதை முழுசாத் தின்னு தீர்க்க முடியும்னு தோணல்ல.." பேசியபடியே ஒரு துண்டைக் கத்தியால் நிமிண்டினான்.
என்றாலும் கவனமாய் இருந்தான். அவன் முட்டுக் கொடுத்திருந்த தோள்ச் சுமை... அதை மனசு தன்னைப் போல உன்னித்துக் கொண்டிருந்தது. அவனது இடது கையில் இப்போது உணர்ச்சியே இல்லை. கம்பியில் அதை அழுத்தி இறுக்கினால் அதில் ஜீவனே இல்லை. ரொம்ப ஆயாசமாய் உணர்ந்தான் இப்போது.
"என்னடா இழவு கையி..." என்றான். "மரத்துப் போயிச் சாவு. சதையே நகமா மாறிப் போகணுமோ. போயித் தொலை. அப்பிடி ஆயி என்ன சாதிக்கப் போறியோ, போ..."
ஆ. தேவை யில்லாமல் நான் கலக்கம் கொள்கிறேன். வேண்டாம். எழுந்து வா, என தனக்குள் நினைத்துக் கொண்டான். தூரத்தில் தூண்டில் தண்ணீரில் இறங்கும் அந்த இருள் பக்கம் பார்த்தான்.
ஏ முதலில் சாப்பிடு. அது கையை மீட்டுத் தரும்... கை மரத்திட்டது. அதுக்கு அது காரணம் அல்ல. நீதான் காரணம். கொள்ளை நேரமா நீ இந்த மீனுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். உடம்பு அசதி காட்டத் தான் செய்யும்.
ஆனால் கால காலத்துக்கும் நான் இதைச் சமாளிப்பேன். என்னால் முடியும்! சரி. நீ முதலில் இந்த சதை விருந்தைச் சாப்பிடு.
ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். மெல்ல அதைச் சுவைத்தான். ருசி... மோசமில்லை.
நல்லா சுவைச்சிச் சாப்பிடு, என நினைத்தான். அப்படியே சாறா உள்ளே இறங்கட்டும், உனக்குள்ளே. வெறுன்ன இதைச் சாப்பிடறதை விட, ஒரு புளிப்போடவோ, எலுமிச்சம் சாறோடோ, துளி உப்போ சேர்த்தபடி இன்னும் ருசி தட்டும்.
"திருவாளர் கை? இப்ப எப்பிடி சௌக்கியம்?" மரத்திருந்த கையைப் பார்த்துக் கேட்டான் அவன். கை இப்ப கட்டையாட்டம் இறுகிக் கெட்டியாக விரைத்துப் போயிருந்தது. "இதோ இது உனக்கு, உனக்காக."
முதல் துண்டத்தை ரெண்டாக்கி ஒண்ணைச் சாப்பிட்டு முடித்திருந்தான். இப்போது அடுத்த துணுக்கை வாயில் போட்டுக் கொண்டான். கவனமாய் அதைச் சுவைத்துவிட்டு, வாய்க்குள்ளேயே தோலை ஒதுக்கிக் கொண்டு, சாப்பிட்டபின் த்தூ என்று வெளியே துப்பினான்.
"ம். இப்ப சரியா வருதா உனக்கு?" என்றான். "ஒருவேளை நான் ரொமப அவசரப் படறேனா?"
அடுத்த துண்டத்தை வெட்டாமல் முழுசாய் அப்படியே வாயில் அதக்கிச் சுவைத்தான்.
நல்ல கொழுத்த மீன். முழுசா ரத்தம் உப்பிக் கிடக்குது, என்று யோசித்தான். நல்லவேளை. என் அதிர்ஷ்டம் தான் இது. அல்பகோர். டால்ஃபின் சிக்காமல், இந்த டூனா சிக்கியது. ஐயய்ய. டால்ஃபின் ஒரேடியா இனிச்சிக் கிடக்கும். இதில் இனிப்பு தட்டவே இல்லை. நல்ல கொழுப்பு. முழுச் சத்தாக் கிடைக்குது எனக்கு...
என்னத்தையாவது செஞ்சி எப்பிடியாவது பொழுதைத் தள்ளறது சரிப்படாது. நிஜ உலகத்துக்கு, காரியத்துக்கு வரணும். இப்ப இத்தோட சேத்துக்க உப்பு இல்லை. அது உண்மைதான். வாய் உப்பை எதிர்பார்க்குது, என்பதே உண்மை.
எனக்குத் தெரியாது. மிச்சம் இருக்கிற இந்த மீன் துண்டங்கள். சூரியன் பட்டு இவை அழுகிப் போகுமோ, கருவாடாப் போகுமோ?... அதுனால, இருக்கிற மிச்ச சொச்சத்தையும், அட உனக்குப் பசிக்குதோ இல்லியோ... சாப்பிடு. சாப்பிட்டுர்றது நல்லது.
உள்ளே கடலுக்குள். அந்த மீன், அமைதி காக்கிறது. நிதானம் காக்கிறது. நான் மீதி உணவையும் தின்னுட்டு, தயாரா இருக்கலாம் இல்லியா?
"பொறுமை கையே... பொறுமை." அவன் கையைப் பார்த்தான். "இதோ உன் சக்திக்காக திரும்ப மீதியும் சாப்பிடப் போகிறேன்."
ம். மீனுக்கும் உணவு கொடுக்க வேண்டும்... என்று திடீரென்று தோன்றியது.
*
தொ ட ர் கி ற து
91 97899 87842

storysankar@gmail.com

Tuesday, July 26, 2016

பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

 பகுதி நான்கு

••
முதுமையில் யாருமே தனியா இருக்கக் கூடாது...
என்றாலும், முதுமையும் அதில் தனிமையும்...
அதை எப்படி யார் தவிர்க்க முடியும்?
••
 ப்படியே நாலு மணி நேரம் கடந்திருந்தது.
மீன் அதுபாட்டுக்கு நீந்திப் போய்க் கொண்டிருந்தது, படகையும் இழுத்துக் கொண்டு. பெரியவரும் விட்டாரில்லை. அப்படியே உறுதியுடன் மல்லாந்திருந்தார் அவர். கயிற்றை இறுக்கமாய்ப் பிடித்த பிடி தளரவில்லை.
"மதியப் போதில் நான் இந்த மீனைக் கொக்கிக்குள் சிக்க வைத்தேன்!" என்று சொல்லிக் கொண்டார். "இன்னும் அதன் முகத்தை நான் பார்க்கவே இல்லை. மீன் மேலே வெளியே வரவே இல்லை..."
"நாரிழைத் தொப்பி அணிந்திருந்தார். வெயில் நல்ல உறைப்பாய் எகிறியிருந்தது. முகப் பக்கமாகச் சரித்து அதை வைத்துக் கொண்டிருந்தார். மீனைக் கொக்கியில் சிக்க வைக்கும் முன்பிருந்தே அதே போலத்தான் வைத்திருந்தார். இப்போது தொப்பியின் முன்பக்க விளம்பு நெற்றியில் நமநமவென அரித்தது.
இருந்த வெயிலுக்கு தாகம் எடுக்க ஆரம்பித்திருந்தது. கிழவன் அப்படியே முட்டி போட்டான். தூண்டிலை அசக்கி விடாத கவனத்துடன் கோச்சுப் பெட்டியை நோக்கி முடிந்த அளவு கிட்டே போனான். இங்கிருந்தே ஒரு கையால் தண்ணீர்ப் போத்தலை எட்டி எடுத்தான். அதன் மூடியைத் திறந்து கொஞ்சம் போல நீர் அருந்திக் கொண்டான். நாக்கை நனைக்கிற அளவு.
ஹா, என அப்படியே அந்த கோச்சுப் பெட்டியில் சிறிது சாய்ந்து கொண்டான்.
பாய்மரத்தை இறக்கி யிருந்தான். படுதாத் துணிகள் தரையில் கிடந்தன. அதன்மேல் அவன் உட்கார்ந்திருந்தான். இப்ப யோசிக்க எதுவும் இல்லை. தேவை சிறிது பொறுமை. நிலைமையைச் சமாளிக்கிற அளவு தெம்பு.
பிறகு மெல்ல திரும்பி தன் பின்பக்கமாய்ப் பார்த்தான். கரையை விட்டு வெகுதூரம் வந்திருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரை தட்டுப்படவே இல்லை. ச். அதனால் என்ன, என நினைத்துக் கொண்டான்.
இராத்திரி யானால் ஹவானாவில் விளக்குகள் எரியும். அவை என் கண்ணுக்குத் தெரியும். அதை அடையாளம் வைத்தே நான் கரை மீண்டு விடுவேன்...
சூரியன் அடைய இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல் கிடக்கிறது. அதற்கு முன்பே ஹவானாவின் கலங்கரை விளக்கு, அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். இல்லாட்டி கூட, நிலா எழும்போது விளக்கு பொருத்தி விடுவார்கள். அட அப்பவும் விளக்கு காணவில்லை என்றால், சூரியன் உதிக்கிற அந்த அதிகாலை, அப்ப கண்ணில் தட்டுப்படவே செய்யும்.
நான் கரை திரும்பி விடுவேன்
அந்த மட்டுக்கு கை கால் நரம்பு சதைன்னு எதுவும் இழுத்துக்கிட்டு கோப்புராட்டித்தனம் பண்ணவில்லை எனக்கு. நான் கிண்ணென்று இருக்கிறேன்.
ஏ நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அதுதான், அந்த மீன்தான், அதுக்கு தான் பிரச்னை. அதன் வாயில கொக்கி!
ஆனாலும் என்ன கனம்... செம எடை இருக்கும் போல. என்னா சுண்டு சுண்டுது என்னை. தூண்டில் கம்பியை அப்படியே கவ்விக்கிட்டு வாயை இறுக்கி மூடிக்கிட்டு இருக்கு போல.
அதைப் பார்க்க முடியவில்லையே, என்று இருந்தது. அட ஒரு முறை, ஒரே ஒருமுறை பார்த்துவிட்டால் நல்லது.
யாருடன் நான் மோதிக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிய வேண்டும், அவசியம்.
மீன் அதுபாட்டுக்கு பாதையை மாற்றாமல் போனது. போய்க் கொண்டே யிருந்தது. உள்ளே போகவும் முயலவில்லை. திசையையும் அது மாற்றவில்லை. ஒரு ராத்திரி பூராவும் அவன் அதனுடன் போய்க் கொண்டிருந்தான்.
மல்லாந்தபடி அவன் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே கிடந்தான். மீன் திசையை போக்கை மாற்றவில்லை என்பதை அவன் உணர்ந்தான். நட்சத்திரங்கள் அவன் கூடவே வந்தாப் போலிருந்தது.
இப்போது சூரியன் கடலுக்குள் இறங்கியதில் குளிர் எடுத்தது. கிழவன் உடம்பின் வியர்வை வற்றிக் காய்ந்து விட்டது. முதுகுப் பக்கம் ஜில்லிட்டிருந்தது. கையும், வயதான காலுங் கூட சிறிது மந்தித்து மரத்து வந்தது.
பகலில் இரைப் பெட்டியின் மீது ஈரமாய் இருந்த சாக்குப் பையை விரித்துப் போட்டு காய வைத்திருந்தான். சூரியன் இறங்கி பொழுது சாய்ந்ததும் அதை எடுத்து கழுத்தில் முடிச்சிட்டு முதுகுப்புறமாக அதைப் பரத்திக் கொண்டிருந்தான்.
தோளில் இறுக்கமாய்ப் பிடித்திருந்தான் தூண்டிலை. தோளில் கயிறு அழுத்தி வரி வரியாய்க் காந்தும் போலிருந்தது. மெல்ல கயிறைச் சிறிது தூக்கி அடியில் இந்தச் சாக்கை ஒரு மெத்தையாட்டம் முட்டுக் கொடுத்துக் கொண்டான்.
ஒருமாதிரி கோஸ்பெட்டியின் முன்சரிந்து படுத்துக் கொள்கிற அளவில் தோது பண்ணிக் கொள்ள முடிந்தது இப்போது. முன்னைக்கு இது வசதியாய்... வசதி என்ன வசதி, முன்னைக்கு இது மோசமில்லை, சகிச்சிக்க முடியற அளவு வலி தந்தது இந்த நிலை... ஆனால் இதுவே அவனுக்கு நல்ல வசதியாய்த் திருப்தியாய்ப் பட்டது.
இந்த மீன், இதையிட்டு இப்போது நான் செய்ய ஏதும் இல்லை. எதுவுமே இல்லை. ம். அது? அதுக்கும் என்னையிட்டு எதுவும் இல்லை. அதாவது இதுவரை இல்லை. இப்படியே அது போயிட்டிருந்தால்... அதனால் எனக்கும், என்னால் அதுக்கும் எந்த பாதிப்பும் இருக்கப் போவது இல்லை.
ஒரு சமயம் எழுந்து கொள்ள வேண்டியிருந்தது. படகின் பக்கமாகப் போய் வெளியே கடலில் ஒண்ணுக்கடித்தான். அப்படியே தலைதூக்கி வானம் பார்த்தான். சில நட்சத்திரங்களைத் தெரியும் அவனுக்கு. அவை இருக்கும் திசை தெரியும். அதை வைத்து தான் இப்போது எந்த வாடையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று கணிக்க முற்பட்டான் அவன்.
அவன் தோளில் இருந்து புறப்பட்டு தூண்டில் குச்சிகளின் ராட்டினம் வழியே நீருக்குள் இறங்கும் அந்தக் கயிறு, அதுவே ஒளிரும் ஒரு தண்டு போலக் கண்டது.
அவர்கள், அவனும் அந்த மீனும், இப்போது மிக சாவகாசமாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். ஹவானாவில் இருந்து வந்த வெளிச்சம் ரொம்ப தேசலாய் இருந்தது. இப்ப நாம கிழக்கு வசமாப் போயிட்டிருக்கம்டா... என்று தலையாட்டிக் கொண்டான்.
ஹவானாவின் கரை இன்னும் இன்னுமாய் மங்கினால் நான் இன்னும் இன்னுமாய்க் கிழக்காலே போயிட்டிருக்கேன். அதான் அர்த்தம்.
இந்தா இந்த மீன், இது தடத்தை மாத்தாமல் கொள்ளாமல் அப்பிடியே போனால், இன்னும் பல மணி நேரம் எனக்கு ஹவானா வெளிச்சம் தெரியத்தான் தெரியும், என நினைத்தான்.
ஆ, கழிப் பந்தாட்டம்... இன்றைய ஆட்டத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை, என்று யோசனை வந்தது.
இப்ப இப்பிடி தனியே படுத்துக் கிடக்கேனே. மீனைப் பிடிச்சிக்கிட்டு, அதை விட்டுவிடாமல் காத்திருக்கிறேனே, இந்நேரங்களில் ரேடியோப் பெட்டி நல்ல சகவாசம் தான்.
அதை நினைச்சிக்கோ. நினைப்பை எப்பவும் விட்றாதே. கவனத்தை சிதற விட்றாதே. இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கே. அதை மறந்துறாதே. அதில் எதும் ஏடாகூடம் ஆயிறக்கூடாது. மடத்தனமா எதுவும் செஞ்சிறக்கூடாது.
பிறகு சத்தமாய்ப் பேசினான். "ம். இப்ப அந்தப் புள்ளை, கூட இருந்திருக்கப்டாதா? எனக்கு ஒத்தாசையாவும் இருப்பான். அதோட, இதெல்லாம் அவனும் பார்ப்பானா இல்லியா?"
முதுமையில் யாருமே தனியா இருக்கக் கூடாது... என அவன் அப்போது நினைத்துக் கொண்டான். என்றாலும், முதுமையும் அதில் தனிமையும்... அதை எப்படி யார் தவிர்க்க முடியும்?
படகில் மீன் இருக்கிறது. அது கெட்டுப் போவதற்குள் நான் அதைச் சாப்பிட வேண்டும். எனக்கு உடம்பில் தெம்பு வேண்டுமானால் நான் அதைச் சாப்பிட வேண்டும், என யோசனை பண்ணினான் அவன்.
மறந்துறாதே. சாப்பாடுன்னு பெரிசா நீ சாப்பிடுவது இல்லை. என்றாலும் கொஞ்சமோ நிறையவோ, எதாவது உள்ள போகணும் அப்பா. காலை விடியட்டும். காலையில் நீ அந்த மீனைச் சாப்பிடுகிறாய். மறந்துறாதே, என்று திரும்ப தனக்குள் வலியுறுத்திக் கொண்டான்.
ராத்திரிக்கு இரண்டு பார்ப்பாய்ஸ்கள்*** (*** டால்ஃபின் போல பாலூட்டி வகையான மீன்கள்) படகுப் பக்கமாக நீந்தி வந்தன. அவை படகை ஒட்டி நீந்தும் சத்தமும் அவற்றின் மூச்செடுக்கும் ஒலிகளும் அவனுக்குக் கேட்டன.
அவை மூச்சு விடுவதை வைத்தே அந்த ரெண்டில் எது ஆண், எது பெண் என்பதை அவனால் உணர முடிந்தது. ஆண் இனம் உலைத் துருத்தி போல காற்றை வெளியே தள்ளும். பெண் இனம் அலுத்த பெருமூச்சு போல விடுகிறது.
"சமத்துப் பிராணிகள்," என்று பேசினான் அவன். "அவை நன்றாக விளையாடித் திரியும். குறும்புகள் செய்யும். ஒண்ணுக்கொண்ணு பிரியமாய் இருக்கும். பறக்கும் மீன்கள் இருக்கில்லே? அவை போலத்தான் இதுகளும். நம்ம சகோதரப் பிறவிகள் ஆச்சே."
இப்போது தன்னிடம் பிடிபட்ட மீனின் யோசனை வந்தது.அவனுக்கு அதன் மீது இரக்கம் சுரந்தது. ஐயோ பாவம். அற்புதமான ஆச்சர்யமான மீன் அது. எத்தனை வயசு ஆகுதோ அதுக்கு, என நினைத்தான்.
இத்தனை கனமான மீன் அவன் இதுவரை தன் தூண்டிலில் பிடித்ததே இல்லை. மகா கனம் பொருந்திய மீன்!
அதேபோல... பிடிபட்ட பிறகு, இப்படி விநோதமா என்னை இது இழுத்துக்கிட்டே போகுதே.... இந்த மாதிரி காரியம் இதுவரை வேற எந்த மீனும் அவனுக்குச் செய்தது கிடையாது!
ரொம்ப நிதானமாய், பதட்டம் இல்லாமல்... சர்ரென்று மேலே துள்ளி வர அது முயலாமல் இருக்கிறது. அது ஒரு துள்ளு துள்ளினால் போதும், நான் அம்பேல். வெலவெலத்தோ கோபப்பட்டோ அது வந்து படகில் ஒரு முட்டு முட்டினாலும் கூட நான் காலி. அதில் சந்தேகமே இல்லை!
ஒருவேளை இது முன்பே எங்காவது தூண்டில் கொக்கியில் பலமுறை சிக்கிக் கொண்டிருக்கலாம். இதோ இந்த மாதிரிதான் நாம இப்ப இந்த ஹோதாவைச் சமாளிக்கணும், என அதற்கு ஒரு யோசனை இருக்கிறதோ என்னமோ?
அது அடியாழத்தில் இருக்கிறது. மேலே தனக்கு எதிரியா ஒரே ஒரு மனுசன் தான். அவன் கூட உதவிக்கு யாரும் இல்லை, என்பது அதற்குத் தெரிய வாய்ப்பு இல்லை அல்லவா?
ஹா. தனது எதிரி ஒரு வயசாளி, கிழட்டு ஆசாமி என்பதும் அது அறியாது!
ஆனால்... எத்தனை அருமையான வேட்டை இது. சந்தையில் அது அப்படியே கெடாமல் விலை போனால் என்ன விலை கிடைக்கும்..
இரையை அது கடித்த அந்த நறுக். ஒரு பௌருஷம் இருந்தது அதில். கயிற்றை அது சுண்டியதே ஒரு சுண்டு, அதுவே நல்ல திடகாத்திரமான் இழு தான்.
இப்ப என்னுடன் ஒரு சமர் புரிகிறதே, அதில் அதற்கு பயம், கலவரம் கிஞ்சித்தும் இல்லை!
அதுவே மனசில் இப்ப எதும் திட்டம் கிட்டம் வெச்சிருக்கலாம் ஒருவேளை. அல்லது, அதுவும் என்னைப் போல, என்னடா இது, இப்பிடி ஆயிட்டதே, என்கிற கையறு நிலையில் திகைத்துக் கிடக்கிறதோ?
ஒரு மார்லின் மீனின் சோடியை ஒருமுறை கொக்கி போட்டுச் சிக்க வைத்திருந்தார் பெரியவர். எப்பவுமே ஆண் மீனும் பெண் மீனும் சோடி போட்டுத் திரிகையில் ஆண்மீன் பெண்மீனை முதலில் இரைகொள்ள விட்டுவிடும்.
அவரிடம் பெண்மீன் மாட்டிக் கொண்டது. கலவரப்பட்டு அது பெரிய அளவில் அமளி துமளியாக்கிட்டது. அது பண்ணிய போராட்டத்தில் சீக்கிரமே அது களைத்துப் போனது.
கடைசிவரை அந்த ஆண்மீன் அதன் கூடவே தான் இருந்தது. தூண்டில்களை ஊடறுத்து இங்கே அங்கே என்று அலைபாய்ந்து கொண்டிருந்தது. பெண்ணைச் சுற்றிச் சுற்றி நீர் மேல்தளத்தில் வளைய வந்து கொண்டிருந்தது.
படகோடு கூடவே கிட்டத்திலேயே அது வந்து கொண்டிருந்தது. எங்கே இது தூண்டிலையே அத்து விட்டுருமோன்னு பெரியவர் பயந்து போனார். அதன் வாலே ஒரு புல்வெட்டி போல கூர்மையாய் இருந்தது. புல்வெட்டி போல அத்தனை பெரிய வால் அது.
அந்தப் பெண்மீன் மேல் அவர் ஈட்டியைப் பாய்ச்சிய போதும், தடியால் அதை அடி மொத்திய போதும் அது, அந்த ஆண்மீன் கூடவே தான் இருந்தது. அதைக் கையில் பிடித்துத் தூக்கினார். ரெண்டு பக்கமும் கூரிய முள்ளெடுத்த ரம்பம் போல இருந்தது மீன். மீனைத் தலையில் கழியால் அறைந்தார். அடித்த அடியில் மீனே ரசம் பூசிய கண்ணாடியின் பின்பக்கம் போல சிவந்து விட்டது.
பிறகு பையனின் உதவியோடு அதைப் படகுக்குள் தூக்கிப் போட்டார். தூண்டிலைத் திரும்ப அடுத்த இரைக்காக சுத்தம் செய்தபடி, அந்த ஆண்மீன் சிக்குமா என்கிற யோசனையில் குத்தீட்டியையும் கையில் எடுத்தார்.
அதை ஆண்மீன் உணர்ந்து கொண்டாப் போலிருந்தது. ஸ்வைங் என அது மேலே ஒரு உயரத்துக்குத் துள்ளியது. படகுக்குள் அதன் சோடியை ஒரு பார்வை பார்க்கிற யோசனையும் இருந்ததோ என்னமோ?
திரும்ப கடலுக்கு ஆழத்துக்குப் போய்விட்டது. கத்திரிப்பூ நிற அதன் நெஞ்சுசெதிள்கள். உடலில் பரவிய கருநீல நெடுங் கோடுகள்.
மேலே வந்து அழகு உடலைக் காட்டி திரும்ப உளளமுங்கிக் கொண்டது ஆண்மீன். கண்கொள்ளாக் காட்சி அது. இன்னும் அப்படியே அந்தக் காட்சிகளை நினைத்தபடி படுத்திருந்தார்..
அவை ஆக சோகமான சமாச்சாரங்கள், என நினைத்தார் பெரியவர். சோடிகளைப் பிரித்தது. பையனுக்கும் அதையிட்டு ரொம்ப துக்கம் தான்.
நாங்கள் மன்னிப்பு கோரிவிட்டு, அதை, அந்தப் பெண்மீனை சரியாகக் கூறு போட்டோம்.
"ஹ்ரும், இப்ப கூட பையன் மனோலின் இல்லாதது ஒரு மாதிரிதான் இருக்கிறது" என்று சத்தமாய்ப் பேசினான் கிழவன். அப்படியே உருளை வடிவத்தில் கிடந்த படகின் அடிமரத்தில் வசம் பார்த்தபடி தோது பண்ணிக் கொண்டான்.
கையில் இன்னும் மீனின் பிடி இருந்தது. அதன் கனம் இப்பவும் தெரிகிறது. தோளில் அழுந்திக் கிடந்தது கயிறு.
மீன் தன் போக்கில் போய்க் கொண்டிருந்தது.
நான் அதனிடம் இன்னும் என் எதிர்ப்பைக் காட்டவில்லை. என்றாலும் அது கூடிய விரைவில் என்னை எதிரியாக, நம்பிக்கை துரோகியாக உணரக் கூடும். அப்போது... அது என்னைச் சமாளிக்க ஒரு முடிவு எடுக்க வேண்டி நேரும்!
அதன் இப்பத்திய முடிவு, கடலின் அடி ஆழத்தில் அந்த இருளில் தேமே என சஞ்சாரம் செய்வது. மனுசாளுக்கு வெகு அப்பால். மனுசாள் பற்றிய கெட்ட கனவுகள் அதற்கு வேண்டாம். மனுசாளின் பொறி பற்றி அது கவலைப்படாமல் போக விரும்புகிறது. அவர்களின் நம்பிக்கைத் துரோகம்...
சட்டென பிடித்து, கொன்று விடுகிறார்கள் பாவிகள்!
ஆனால் என் விருப்பம், மத்தவர்களை விடு. எனக்கு இப்போது அந்த அடியாழத்துக்கு நானும் போய் அதைப் பார்க்க வேண்டும். உலகத்தில் வேற யார் பத்தியும் எனக்கு பொருட்டில்லை. நான். அந்த மீன்... அந்த மீனை நான் சந்திக்க வேண்டும்.
இப்போது நாங்கள் இருவரும், பிணைந்து கிடக்கிறோம். நேத்து மதியத்தில் இருந்து நாங்கள் ஒருசேரப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
என்றால் இதில் ஒரு விசித்திரம், யாரும் யாருக்கும் உதவியோ ஒத்தாசையோ கிடையாது!
ஹ்ம். ஒருவேளை நான் மீனவனாகவே ஆயிருக்கக் கூடாதோ என்னவோ? நான் மீனவன் என்று சொல்லிக் கொள்ள லாயக் இல்லையோ என்னவோ? ஆனால் நான் பிறந்ததே இப்படி. நான் மீனவனாகவே பிறந்து விட்டேன்.
டேய் காலைல வெளிச்சம் வந்ததும், ஆமா. மறந்துறாதே. அந்த மீன், பிடிச்சியே அதை, சாப்பிடணும் நீ.
விடியலின் வெளிச்சந் தட்டும் முன்னால் அவனுக்கு பின்பக்கத்தில் இருந்த ஒரு தூண்டில் சலனப்பட்டது. மூங்கில் குச்சி முறியும் சத்தமும் அவனால் கேட்க முடிந்தது.
தூண்டில் பிரிகள் சரசரவென்று ராட்டினத்தில் உருண்டாப் போல கேட்டது. நல் இருட்டு வேளை. வெளிச்சமே இல்லை. பாளை வெட்டும் கத்தி வைத்திருந்ததை அந்த இருட்டிலேயே எடுத்தான்.
இடது தோளில் கனமாக அந்த மீன் பிடித்து வைத்துள்ள கயிறு அழுந்திக் கொண்டிருந்தது. ராட்டினச் சட்டத்தின் வழி சரசரவென்று சரியும் அந்தக் கயிறின் பிரிகளை லாவகமாக கத்தியால் வெட்டி விட்டான்.
அப்படியே தனக்கு ஆகக் கிட்டத்தில் இருந்த இன்னொரு தூண்டில், அதையும் வெட்டிவிட்டான். கையிருப்பில் மிச்சம் இருந்த இரு கண்டுகளின் கயிறையும் முடிச்சு போட்டு சேர்த்துக் கொண்டான்.
நல்ல இருட்டு. ஒரு கையால் வேலை செய்ய வேண்டியிருந்தது. திறமையாய்ச் செயல்பட்டான் அவன். கண்டின் சுருணைகளில் காலை அழுத்தி அது மேலும் உருவிக் கொள்ளாமல் அழுத்தி வைத்துக் கொள்ள வேண்டி யிருந்தது.
இப்போது அவனிடம் தயாராய் ஆறு கண்டுகள், அவன் பயன்படுத்திக் கொள்ளலாம் என காத்திருந்தன. ரெண்டு தூண்டில்களை வெட்டி விட்டது போக மீதிக் கண்டுகள். இரண்டு கண்டுகள் அளவு கயிறை உள்ளே இருக்கிற, அவனை இழுத்துப் போகிற மீன் வைத்துக் கொண்டிருக்கிறது.
எல்லாவற்றையும் இணைத்து சேர்த்து கட்டி வைத்துக்கொண்டு விட்டான்.
வெளிச்சம் வரட்டும். அந்த நாப்பது ஃபாதம் தூண்டில் இல்லையா?... அதையும் துண்டித்து இதனோடு சேர்த்துக் கொள்ளலாம், என நினைத்துக் கொண்டான்.
என்ன ஒரு இது என்றால், ரெண்டு நூறு பாதம் இழைகள், அருமையான கடலான் கார்டல், நஷ்டப்பட்டு விட்டது. கடலுக்குள் போய்விட்டது. அதன்கூடவே கொக்கிகள், முட்கள், இழைகள். இரைகள்...
ஆனால் இவற்றை நாம சம்பாதிச்சிக்கலாம். ஆனால் இந்த மீன்? இதை விட்டுட்டா அவ்வளவுதான். வேற தூண்டில்ல சிக்கிய மீன், ஆத்திரப்பட்டு அது இந்த மீனை அத்து விட்டுவிட்டால்?. ஆகவே தான் அதை வெட்டி விடவேண்டி வந்தது..
இப்ப கடைசியா இரையைக் கடிச்சுதே, நான் தூண்டிலை வெட்டி விட்டேனே? அந்த மீன் பத்தி எதுவும் தெரியாது எனக்கு. அது மார்லினோ, பிராட்பில், சுறா என்ன வகையோ அறியேன். தூண்டிலைப் பிடிச்சி அதை  நான்  எடை சோதிக்கக் கூட இல்லை.
அவசரமா அதை நான் வெட்டிவிட்டு, இந்த விளையாட்டில் இருந்து அதை வெளியேத்த வேண்டியிருந்தது.
சத்தமாய்க் கத்தினான். "இந்தப் பயல், அவன் இல்லாமப் போயிட்டானே!"

தொ ட ர் கி ற து
91 97899 87842


Saturday, July 23, 2016

பெரியவர் மற்றும் கடல்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் எஸ். சங்கரநாராயணன்

3

••
“ஆமாம்!” கிழவன் பரபரப்பானான்.
“அட ஆமாங்கறேன்!”
••

ஆ. அதோ பறவை... வட்டம் இடுகிறது!
“அது மீனைக் கண்டுக்கிட்டது!” கிழவன் சத்தமாய்க் கூவினான். பறக்கும் மீன்கள் எதுவும் நீர்ப்பரப்புக்கு மேலே எகிறவில்லை. தூண்டில் இரையிலும் எந்தச் சலனமும் இல்லை. கிழவன் உன்னிப்பாகப் பார்த்தான்.
சின்ன டூனா வகை மீன் குஞ்சு ஒண்ணு. விஷ்க் என்று தண்ணீருக்கு மேலே தாவியது. அப்படியே காற்றில் சுழன்று தலைகீழாகத் திரும்பி தண்ணீருக்குள் புகுந்து கொண்டது. மேலே காற்றுக்கு அந்த மீன் எகிறும்போது அதன் உடம்பே பளபளவென்று வெள்ளியாய்ப் பொலிந்தது அந்த சூரிய வெளிச்சத்தில்.
முதல் மீன் திரும்ப நீருக்குத் திரும்பியதும், இதோ அதோ என்று மேலும் ஒவ்வொரு மீனாகத் துள்ளாட்டம் போட்டன. நாலா பக்கத்திலும் எட்டு திசை, அல்ல மேலும் கீழும் என்று பத்து திசையிலும் சிதறின அவை. தண்ணீரே அமளி துமளிப் பட்டது. காலை ஊனி எக்கி நீளந் தாண்டுதல் போல. தூண்டில்களைச் சூழ்ந்து கொண்டன அவை. தூண்டில்களைச் சுற்றி மொய் மொய் என்று மேய்ந்தன. அதை முட்டி தட்டி அசைத்து ஒரு ஆட்டம்.
டூனா மந்தை ரொம்ப வேகமா நகர்ந்து விடும். அது கொஞ்சம் சாவகாசப்பட்டால் நான் அவற்றை அடைந்துவிடுவேன்... என அவன் நினைத்தான். அதுகளின் திரிசமனில் தண்ணீரே நுரைத்துச் சிரித்தது.
பறவை சிறகுகளைச் சரித்து இறங்கி தண்ணீர் மட்டத்துக்கு வந்து மீனை லபக் எனக் கவ்வ எத்தனித்தது. மீன்கள் இந்த களேபரத்தில் மேல்மட்டத்தில் பரிதவித்திருந்தன.
“மீனவனுக்குப் பறவைகள் ரொம்ப ஒத்தாசை” என்றான் கிழவன்.
அந்த நேரம் அவன் காலால் அழுத்திக் கொண்டிருந்த ஒரு தூண்டில் சிறிது சிணுக்கம் காட்டியது. தூண்டில் கம்பிகளைக் கடலில் இறக்கிய வசத்தில் காலில் அதன் ஒரு பகுதியை அழுத்தி வைத்துக் கொண்டிருந்தான் அவன்.
கிழவன் துடுப்புகளைத் தளர விட்டான். தண்ணீருக்குள் சின்ன டூனா மீன் தூண்டிலை எத்தனை கனமாய் இழுக்கிறது என்று கையால் இலேசாய் இழுத்துப் பார்த்தான். கயிறை இறுக்கமாய்ப் பிடித்தான்.
மெல்ல அந்தத் தூண்டிலை மேல் நோக்கி வலிக்க ஆரம்பித்தான். அதை மேலே இழுக்க இழுக்க கயிறு மேலும் மேலும் நடுக்கமுற்று உதறிப் பதறியது.
ஒரு மீனின் நீல முதுகு தெரிந்தது. தகதகவென்று அது திரும்பியது. அதை அப்படியே தூண்டிலோடு பக்கவாட்டில் இழுத்து தூக்கிப் படகில் போட்டான்.
சூரியனைப் பார்க்க அது அப்படியே படகின் தரைத் தளத்தில் கிடந்தது. கிண்ணென்று போர்க்குண்டு வடிவத்தில் மீன். குறிப்பு காட்டாத உப்பிய கண்ணின் வெறித்த அசையாத பார்வை.
கிழிசல் இல்லாத ஒழுங்கான அதன் வாலைப் பற்றினான். உதறித் துடிதுடித்தது வால்.
அப்படியே படகின் சுவரில் அதை ஓங்கி அறைந்து சாந்தப் படுத்த முயன்றான் அவன். உயிர் போகவில்லை அதற்கு.
பாவம் ரொம்ப துடிக்க விடக் கூடாது. தலையில் ஒரு அடி. காலால் ஒரு உதை. படகின் உள்ளே ஒருச்சாய்ந்த சிறிய நிழல். மீன் சாகாமல் இன்னும் கடைசி நேரத் துடிப்பு காட்டியது.
“அல்பகோர்!” சத்தமாய்க் கத்தினான் கிழவன். “பெரிய மீனுக்குச் சரியான தூண்டில் இரை ஆச்சே. இதுவே பத்து பவுண்டு எடை காணுமே!”
தனியே இப்படி தான் மாத்திரம் படகில் இருந்தால் இப்படி தனக்குத் தானே பேசிக் கொள்கிறான் அவன். எப்படி எப்போது இந்தப் பழக்கம் ஆரம்பித்தது நினைவில் இல்லை.
அது ஒரு காலம்.. இப்படி தனியான கணங்களில் வாய் தன்னைப் போல பாட்டெடுக்கும். படகில் சில ராத்திரிநேரப் பயணங்களில், ரோந்து போனாலோ, ஆமை வேட்டை என கிளம்பிய சமயங்களிலோ பாடியிருக்கிறான்.
பையன் கூடவருவதை நிறுத்திய பின் தனியே அவன் மாத்திரம் படகில் கிளம்ப வேண்டி வந்ததே, அபபத்திலேர்ந்து வந்திருக்கலாம் இந்தப் பழக்கம். தனியே தனக்குத் தானே பேசிக் கொள்வது.
சரியாக அவனுக்கு ஞாபகம் இல்லை.
ஆனா என்ன வேடிக்கை என்றால், அவனும் பையனும்... ரெண்டு பேருமாய் மீன் பிடிக்க என்று கூட்டாய்ப் போனால், அவர்கள் தேவைப் பட்டால் ஒழிய ஒரு வார்த்தை பேசிக் கொண்டது கிடையாது!
ராத்திரி வேளை என்றால் பேசிக் கொள்வார்கள். அல்லது, புயல் மாதிரி கடலுக்குள் அசந்தர்ப்பங்கள் எதுவும் வந்தால் பேசிக் கொள்வார்கள். அவ்வளவுதான்.
கடலில் இருக்கும்போது தேவைப்படி பேசு. தேவை இல்லாட்டி பேச்சு வேணாம். வேலையில் கவனம் இருக்கட்டும். கிழவனுக்கு அப்படித்தான் யோசனை இருந்தது. அதைக் கடைப்பிடிக்கவும் செய்தான்.
அது ஒரு காலம். இப்ப அவனே மனசில் நினைக்கிறதை யெல்லாம் அந்த அத்துவான வெளியில் சத்தம் போட்டு அறிவித்தான். ஒரே விஷயமானாலும் திரும்பத் திரும்பக் கத்திச் சொன்னான். கடல்தானே? சுத்தி ஆள் யார் இருக்கா? யாரை அது பாதிக்கப் போகிறது, என்கிற எண்ணமாய் இருக்கலாம்.
“ஹா ஹா, இப்படி நான் தனியே சத்தமாய் பேசிக்கிடறதைப் பார்த்தால் அவனவன் என்னைப் பைத்தியக்காரன்னு நினைப்பான்” என்றான் கிழவன். அதையும் அந்தக் கடல் வெளி அத்துவானத்தில் சத்தமாகவே சொல்லிக் கொண்டான். “நானா பைத்தியக்காரன்? நான் பைத்தியம் இல்லை. நான் அவங்களை சட்டை பண்ணப்போறது இல்லை!
துட்டு வசதி உள்ளாட்கள் படகில் ரேடியோப் பெட்டி எடுத்துட்டுப் போறாங்க. அதுவே நல்ல பேச்சுத் துணையா ஆயிருது. கழிப் பந்தாட்டம் பத்தி சேதிகள் அங்கருந்தே கேட்டுக்கலாம்.
ஆனால்... இது நாம கழிப் பந்தாட்டம் பத்தி யோசிக்கிற நேரமா?..., என நினைத்தான் கிழவன். ஹ்ம். இப்ப... நான் நினைச்சிப் பார்க்க வேண்டியது, ஒரே ஒரு விஷயம்தான். என் பிறப்பு பத்தி. எதுக்காக நான் பிறந்திருக்கிறேன். நம்ம தேவை, நம்ம பிழைப்பு... அதைப் பத்தி யோசிக்கலாம்.
அதோ ஒரு மீன் மந்தை! அங்கே ஒரு பெரிய மீன் இருக்கலாம், என நினைத்தான் அவன்.
உணவு கொள்ள மேல் மட்டம் வரை வந்த மந்தை மீன்களில் வழி தப்பிப்போன ஒன்றைத்தான் நான் பிடித்தேன். ஆனால் இதுகள் சட்டென விலகி தூரமாய்ப் போய்விடுகின்றன. என்ன வேகம்!
இன்னிக்கு எனக்கு கடலின் மேல் மட்டத்தில் கிடைக்கிற மீன்கள் எல்லாமே அப்படி விரைவு காட்டி வெகுதூரம்... வட கிழக்குப் புறமாக நகர்ந்து விடுகின்றன.
இது தான் எனக்கான நேரம், என்பதா? எனக்குத் தெரியாமல் எதோ நடக்கப் போகிறதோ ஒருவேளை?
இங்கே யிருந்து இப்போது கரையின் பசுமை தெரியவில்லை. நீல மலைச் சிகரங்கள் தான், ஆனால் வெண்மையாய்க் கண்டன. பனித் தொப்பி அணிந்தாப் போல. அதற்கும் மேலே வெண்மை மலைக் குவியல்களாய் முகில்கள்.
கடல் நிறம் இன்னும் ஆழப்பட்டிருந்தது. சூரிய ரச்மிகள் கண்ணாடி போல் தண்ணீரில் மினுக்கங் காட்டின. ஒளி தண்ணீர் மட்டத்தில் பட்டு வண்ணத் தெறிப்புகளாய்ச் சிதறினாப் போலிருந்தது.
சூரியன் நன்கு மேலேறி வந்திருந்தான். கடலில் கொத்துக் கொத்தாய்க் கிடக்கும் தாவர முடிச்சுகளே தெரியவில்லை இப்போது.
இப்போது வெறும் ஒளி சிதறும் தண்ணீர். நீலக் கடல்.
தூண்டில்களை இப்போது நேரே கடலின் அடியாழத்துக்கு, ஒருமைல் ஆழத்துக்கு, கோணாமல் சாயாமல் விட்டு வைத்திருந்தான்.
அந்த டூனா...
எல்லா மீன் வகைகளையும் மீன்வர்கள் டூனா என்றே அழைத்தார்கள். எது என்னசாதி மீன், என்பதையே அவர்கள் அதை விற்பனை செய்ய, அல்லது தூண்டில் இரை என்று கேட்டு வரும் போதுதான், படகில் இருந்து கரைக்கு வந்து சேர்ந்த பின்புதான் பேசிக் கொண்டார்கள்.
சூரியன் தகிக்க ஆரம்பித்திருந்தது. அவன் பின்கழுத்தில் எரிச்சல் எடுத்து அரிப்பு கண்டது இப்போது. துடுப்பு வலிக்க என்று குனிய நிமிர முதுகில் வியர்வை நதிகள் ஓடின.
கொஞ்ச நேரம் துடுப்பு போடாமல் அப்படியே மிதக்கலாம், என நினைத்தான். கால் கட்டை விரலில் தூண்டில் கயிற்றினால் ஒரு முடிச்சு போட்டுக் கொண்டு சிறிது கண்ணயரலாம் என்று கூட இருந்தது. தூண்டிலில் எதுவும் சலனம் வந்தால் அதுவே என்னை உசுப்பி விட்டுரும்...
என்ன இருந்தாலும், இன்னிக்கோட இது எண்பத்தி ஐந்தாவது நாளாக்கும். நாம இன்னிக்கு நல்லபடியா சுணக்கம் இல்லாமல் வேலை செய்யணும்.
அட அப்போதுதான், நீருக்கு மேலே உயரத்தில் நீட்டி தூண்டிலைக் காட்டிக் கொண்டிருந்த பச்சை மூங்கில் குச்சிகளில் ஒன்று தண்ணீருக்குள் நல்லா உள்ளமுங்க ஆரம்பித்தது!
“ஆமாம்!” கிழவன் பரபரப்பானான். “அட ஆமாங்கறேன்!”
துடுப்புகளை அதிராமல் இயக்க ஆரம்பித்தான் கிழவன். அந்தத் தூண்டிலை எட்டி மிருதுவாய்ப் பற்றினான். வலது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இரண்டினாலும் பிடித்தான் அதை. அதில் கயிற்றின் விரைப்போ, கனமோ தட்டினாப் போல இல்லை.
அப்படியே லேசான லகுவில் வைத்துக் கொண்டான் அதை. ஆ, திரும்ப அந்த உதறல். இப்போது ஒரு சுண்டு சுண்டப்பட்டது கயிறு. அதைத் தெளிவாக உ ணர முடிந்தது.
அழுத்தமான இழுப்பு அல்ல. கனமும் தட்டாத இழுப்பு தான் அது.
ஆனால்... என்ன அது... அவனுக்கு அது என்ன என்று தெரிந்து விட்டது!
ஒரு நூறு ஃபாதம் ஆழம் இருக்கும். ஒரு மார்லின் உணவு எடுக்கிறது. சார்தைன் மீன்கள் ருசிக்கப் படுகின்றன. கொண்டி கொக்கியை மூடி மறைத்து மேலேசுற்றி மூடிக் கட்டப் பட்டிருக்கிற சார்தைன் மீன்கள் அவை. சார்தைன் மீனின் தலைக்குள் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு காத்திருக்கிறது முள் கொக்கி.
கிழவன் அந்தத் தூண்டிலை மிருதுவாக, மென்மையாக, செல்லமாக இடது கையினால் பிடித்திருந்தான்.
இனி தூண்டில் வேணாம்... என அதை மூங்கில் குச்சியில் இருந்து உருவி தன் கைக்கு மாற்றிக் கொண்டான். மீன் இப்போது சௌகரியமாக இரை எடுக்கலாம். மேலே இருந்து தூண்டில் அதை மேல் பக்கமாக இழுத்து இடைஞ்சல் கொடுக்காது.
கடலின் இத்தனை உள்ளே இருக்கிறது இந்த மீன். கரைக்கு இத்தனை தூரத்தில். இந்த மாசக் கணக்குக்கு, பெரிய மீன் என்றுதான் தோணியது அவனுக்கு.
சாப்பிடு மீனே. உனக்குதான் அவை. சாப்பிடு. தயவு செய்து சாப்பிடு!
அந்த சார்தைன் புத்தம் புதுசு. ருசிக்குப் பஞ்சமில்லை. நீ பாரு... கடல்ல அந்த அறுநூறு அடி ஆழத்துல, மகா இருட்டுல இருக்கே. சிறு கடி. போய் ஒரு ரவுண்டு சுத்தி வா. திரும்ப வா. திரும்ப இன்னும் சாப்பிடு. வா.
அந்த மீனின் கடியில் சிறு சுண்டல் கையில் தெரிந்தது. திடுமென்று அந்த சுண்டலில் இன்னும் விசை. சார்தைனின் தலையை நறுக்கென்று கடிக்கிறதோ? அதைக் கொக்கியில் இருந்து கடித்து இழுக்க வரவில்லையோ?...
பிறகு அசைவே இல்லை உள்ளே.
”என்னாச்சி? வா மாப்ளே!” என்று சத்தமாய்க் கத்தினான் கிழவன். “ஒரு ரவுண்டு போய் வா. திரும்ப வா. வந்து வாசனை... எப்பிடி இருக்கு? அருமையா இல்லே? இப்ப பெருங் கடியாய் ஒரு கடி, கடி பார்க்கலாம்.
ஆ... வந்திட்டது. டூனா! கெட்டியான மீன். குளிர்ந்து கெடக்கு அது. அருமையான மீன்... சங்கோஜப் படாதே. உனக்குதான். எடுத்துக்கோ. சாப்பிடு!”
கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே பிடித்திருந்தான் தூண்டிலை. அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே மத்த தூண்டில்களின் மீதும் ஒரு கண் இருந்தது. ஒருவேளை மீன் மேலோ, கீழே நீந்தி வரலாம் அல்லவா?
என்றாலும் அதேபோல ஒரு செல்லச் சுண்டல் இதே கயிறில் உணர்ந்தான் அவன்.
“அதுக்கு இந்த உணவு பிடிச்சிப் போச்சு” என்றான் அவன். “வாய் வைப்பா நல்லா...” என்று கத்திச் சொன்னான். “யேசுவே, அந்த மீனுக்கு உதவி பண்ணு. அதை இரையை உண்ணப் பண்ணு!”
என்றாலும் அப்போது மீன் இரையைச் சீண்டியதாகத் தெரியவில்லை. விலகிப் போயிருந்தது அது. தூண்டில் மௌனம் காத்தது. அசைவே இல்லை. அவனுக்கு, கைக்கு சலனமே தெரியவில்லை.
“அது போயிருக்காது” என்று சொல்லிக் கொண்டான் அவன். “யேசுவே! அது விலகிப் போய்விடாது. அட போகுது. போயி ஒர் ரவுண்டடிக்கும். பின்னே திரும்ப வரும்.
சிலப்ப என்னாயிரும், இப்பிடி முன்னே ஒருவாட்டி எதோ துண்டில் கீண்டில்ல மாட்டியிருக்கும். மாட்டி தப்பிச்சிருக்கும். அதை நினைக்குதோ என்னவோ?
ஆ... இப்போது திரும்பவும் தூண்டில் துடித்தது. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“அப்டியே சல்லுனு ஒரு ரவுண்டு அடிச்சார் வாத்தியார். திரும்பிட்டார்” என்றான் கிழவன். “இப்ப பார். வந்து இரையை லபக் என கவ்விக் கொள்வார்.”
லேசாய் மிக மென்மையாய் ஒரு இழுப்பு. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
உடனே அந்த இழுப்பில் ஒரு கடுமை.. நம்ப முடியாத மகா கனம். அது அந்த மீனின் எடைதான்.
சட்டென கயிறுகளை நழுவ விட்டான். மேலும் மேலும் தளர விட்டான். கண்டில் இருந்து உருவிக்கொண்டு தண்ணீருக்குள் இறங்கியது கயிறு. அவனது விரல்களின் வழியே சுறுசுறுவென்று கயிறு தண்ணீருக்குள் இறங்கியது.
முதல் இரண்டு கண்டுகளின் கயிறும் முழுவதுமாக அவிழ்ந்து துண்ணீருக்குள் போய்விட்டன. கயிறு தளரத் தளர விரல் வழியே அது உள்ளே இறங்க இறங்க, அப்பவும் கூட அவனுக்கு உள்ளே இருக்கிற மீனின் எடையை உணர முடிந்தது. சரியான கனங் கனத்தது மீன்.
கையில் கயிறைப் பிடிக்காத மாதிரி அத்தனை மெனமையாகப் பற்றியிருந்தான். என்றாலும் அதை உணர்ந்தான் அவன்.
“யம்மாடி, என்ன மாதிரியான மீனப்போவ்!” என்றான் அவன். “விஷயம் என்னன்னால்... மீன் அந்த உணவைக் கடித்தாகி விட்டது. முள் கொக்கியும் அதன் வாயில் இப்போது. ஆனால்... கொக்கி இப்போது அதன் வாயில் பக்கவாட்டில் போல மாட்டிக் கொண்டிருக்கிறது! மீன் இப்ப அந்தக் கொக்கியோடவே மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது!”
போகட்டும், என நினைத்தான். ஒரு தூரம் போகும் அது. மெல்ல திரும்பும். மெல்ல அந்த இரையை விழுங்கும் அது.
ஆனால் நினைத்தானே யொழிய சத்தமாய் அதை வெளியே பேசவில்லை அவன். சில நல்ல காரியங்கள், போட்டு உடைச்சாப்ல அவற்றைப் பேசிறக் கூடாது. அப்பறம் அது நடக்காமல் போயிரும்!
நல்ல வசம்மான பெரிய மீன். அது தெரியும் அவனுக்கு. படகை விட்டு தள்ளிப் போகிறது அந்த இருளில், இரைமீன் வாய்க்குள் குறுக்கு வசத்தில் அதக்கப் பட்டு இருக்கிறது.
அந்த விநாடியில் மீன் சட்டென நீந்துவதை நிறுத்தியது.
என்றாலும் அவன் கையில் உணரப்பட்ட அந்த எடை, அதை இப்போது மீண்டும் உணர முடிந்தது.
இப்போது அந்த எடை இன்னும் அதிகமானது. இன்னுமாய்க் கயிறைத் தளர விட்டான் அவன். ஆனால் கை விரல்களின் பிடியை இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
இப்போது கயிறு நேராய்த் தண்ணீரில் நிற்கிறதை உணர முடிந்தது.
“இரை எடுத்துவிட்டது!” இப்போது வெளிப்படையாய்ச் சொன்னான் அவன். “இப்ப... நான்... அது திருப்தியா இரையெடுக்க வைப்பேன்!”
திருமப விரல்கள் வழியே கயிறை நழுவ விட்டான். குனிந்து இடது கையால் அடுத்த தூண்டிலின் இரு கண்டுகளில் இருந்து மேலும் கயிறை இதனோடு சேர்த்து உள்ளே இறக்குகிற அளவில் வகை பண்ணிக் கொண்டான்.
இப்ப அவன் தயார்! இப்ப அவனிடம் முந்நூத்தி நாற்பது ஃபாதம் ஆழம் வரை உள்ளே செலுத்த கயிறு இருக்கிறது. இந்தக் கணக்கு தவிர இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கயிறு... அதுவும் கை கொடுக்கிறது.
“இன்னுங் கொஞ்சம் சாப்பிடு. கடி!” என்றான் அவன். “நல்லா இஷ்டப்படி சாப்பிடு.”
அதை நீ கடிக்கற கடியில்... முள்ளின் கொக்கி நல்லா உள்ளே, உன் இதயம் வரை போகிறாப் போல கடி, அத்தோடு உன் சமாச்சாரம் முடியணு1ம். அந்த மாதிரி ஒரு கடி... கடி பார்க்கலாம்... என சொல்லவில்லை. நினைத்தான்!
வா. சும்மா மேலே வா நீ. ஈட்டி தயாராய் வெச்சிருக்கிறேன். உன் மேல் பாய்ச்ச நான் தயார். நான் காத்திருக்கிறேன். ம். நீ? நீ தயாரா?
என்ன நீ, சோத்துத் தட்டை வைத்துக்கொண்டு சாப்பாட்டு மேசையில் இத்தனை நேரமா உட்கார்ந்திருக்கிறாய்!
“இப்போ!” என்றான் சத்தமாய். ரெண்டு கையாலும் அந்தத் தூண்டிலை ஒரு கஜ அளவுக்கு மேலே வலித்தான். முழு பலத்துடன் இன்னும் அசைத்து மேலே இழுத்தான். இந்தக் கையாலும் அந்தக் கையாலும் மாற்றி மாற்றி மேலே இறைத்தான்
கயிறை. மேல் ராட்டினத்தில் இருந்து இறைத்தான். தன் முழு பலத்தையும் பிரயோகித்து உடம்பை விரைப்புடன் பின் சாய்த்து இழுத்துக் கொண்டிருந்தான் அவன்.
ஒண்ணுமே ஆகவில்லை.
மீன் மெதுவாக வெளியே நகர்ந்தது ஆழத்தில்.
அவன் ஆட்டிய ஆட்டத்தில் அதை ஒரேயொரு இன்ச் கூட மேலே இழுக்க முடியாது போயிற்று.
அவன் பயன்படுத்தும் வடக் கயிறு ரொம்ப உறுதியானது. பெரிய மீன்களை அது தாக்கு பிடிக்கும்.
என்ன கனம் இருக்குது இது... அதை, மீனை மேலே இருந்து பிடிக்கவே அவனுக்குத் திணறலாய் இருந்தது. அவன் பிடித்த கயிற்றில் இருந்து தண்ணீர் முத்துக் கோர்த்து வரிசையிட்டுச் சொட்டியது. இபபோது
கடல் அடியில் சின்ன ரகசியச் சத்தம். அவன் அப்படியே இறுக்கிப் பிடித்து நின்றிருந்தான். படகின் குறுக்குக் கட்டையில் முன்பக்கமாக மல்லாக்கப் படுத்துக் கொண்டு முழு தம் பிடித்து நின்றான்.
படகு இப்போது தன்னைப் போல வடமேற்கு திசையில் நகர ஆரம்பித்திருந்தது.
மீன் நல்ல நிதானத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது. கூடவே அவனும் நகர்ந்து கொண்டிருந்தான். நீர்ப்பரப்பு அமைதியாய்க் கிடந்தது. மீதித் தூண்டில்களின் மீதி இரைகள். அவை கடலில் கூட வந்தன. அவனால் இப்போது செய்யக் கூடியது எதுவும் இல்லை.
“ஹ்ம். இப்ப என்கூட அந்தப் பையன் இருந்திருக்கலாம்!” என்றான் கிழவன் சத்தமாய்.
“ஒரு மீன்... அது என்னை இழுத்துக்கிட்டுப் போகுது இப்போ. ஒரு கட்டைபோல நான், அது என்னை இழுக்க, என்னால் எதுவும் செய்ய முடியாமல் அதன் இழுப்புக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கயிறை எங்காவது கட்டி விடலாம். ஆனால் பெரிய மீன் இது. கயிற்றை சுலபமாக அறுத்துக் கொண்டு தப்பித்து ஓடி விடும் அது.
நான் பிடியை விட்டுவிடக் கூடாது. தேவைப் பட்டால் அது உள்ளே இழுக்கும் போது மேலும் கயிறை தேவைப்படி அதன் வசத்துக்குத் தளர விடுவேன்.
இதுல ஒரு நல்ல விஷயம். கடவுளுக்கு நன்றி. அது அதுபாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. சட்டுனு உள்ளே என்று போய்விட அது நினைக்கவில்லை!
அதுபாட்டுக்கு தீடீர்னு கிழே அடியாழம் நோக்கி நீந்த ஆரம்பிச்சால்... நான் என்ன பண்ணுவேன், எனக்கே தெரியாது. ஆது ஆக்ரோஷப் பட்டால்? இப்படியே இழுத்துக் கொண்டு ஓட முடியாமல் இறந்து போனால்? நான்... என்னால் என்ன செய்ய முடியும்? ஒண்ணுமே புரியவில்லை எனக்கு.
ம். ஆனால்... நான் எதாவது செய்ய வேண்டும். செய்வேன். என்னால் முடியும். என்னால் நிறைய விஷயங்கள் முடியும். செய்வேன்!
அப்படியே மல்லாந்த நிலையில் அந்தக் கயிற்றை இறுக்கமாய்ப் பிடித்திருந்தான் அவன். தூண்டில் கழி சாய்ந்த வாக்கில் தண்ணீரில் உள்ளே நுழைவதைப் பார்த்தபடி யிருந்தான்.
படகு தன் போக்கில் வடமேற்காக ஒரு பிரயாணம்.
இப்படியே வாய்க்குள் கொக்கியுடன் அது இழுத்துக் கிட்டேபோயிட்டிருந்தால் அதுவே அதைக் கொன்னுருமே, என நினைத்தான். சும்மாங் காட்டியும் இப்படியே அதுபாட்டுக்கு என்னை இழுத்திட்டுப் போயிட்டிருக்க முடியாது, என நினைத்தான்.

-     தொடர்கிறது

-     91 97899 87842 storysankar@gmail.com